புதுச்சேரி, மார்ச் 24 - துத்திப்பட்டு கண்ணாடி தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து சிஐடியு சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தொண்டமாநத்தம் துத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் இந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் தொழிற்சாலை லாக்அவுட் செய்துள்ளது. 20 மாதங்களாக சட்டவிரோத கதவடைப்பு கண்டித்தும், பணி நீக்கம் செய்துள்ள தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி பிரதேச தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், பிரபுராஜ், சௌந்தரராஜன், முகிலன், பச்சமுத்து உட்பட திரளான தொழிலாளர்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.