பீகார் மாநிலத்தில் காரும், டிராக்டரும் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் நடந்த திருமண விழாவிற்கு சென்று விட்டு காரில் சிலர் இன்று காலை வீடு திரும்பியுள்ளனர். கார் பஸ்ரஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த டிராக்டர், கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அருகிலிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளாது. .இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரி கூறுகையில்,
திருமண விழாவிற்கு சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணித்த காரும், அதிக பாரம் ஏற்றி வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதியதில் காரில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த அனைவரும் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்கள் கவுதம் தாக்கூர் (32), மோனு குமார் (7), அமன் குமார் (25), பண்டி குமார், அன்ஷு குமார் (23), பல்து தாக்கூர் (50), திலோ கிமார் (10), பிரகாஷ் சிங் மற்றும் தர்மேந்திர சர்மா என அடையாளம் தெரிந்துள்ளதாக தெரிவித்தனர்.