பஞ்சாப், பதான்கோட் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் 70 கி.மீ தூரம் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலிருந்து 53 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் பஞ்சாப் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் கதுவாவி ரயில் நிலையத்திற்கு வந்த போது ஓட்டுநர், ஹேண்ட் பிரேக் போடாமல் ரயிலை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.
பின்னர், சில நிமிடங்களிலேயே ஓட்டுநர் இல்லாமல் ரயில் தானாகவே தண்டவாளத்தில் ஓடியது. சரக்கு ரயில் 70கி.மீ பயணித்து பஞ்சாபின் கோஷியார்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது மரக்கட்டைகளைத் தண்டவாளத்தில் போட்டு ரயிலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ரயில் தண்டவாளத்தில் தானாகவே ஓடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சரக்கு ரயில் வந்த தண்டவாளம் வழியாகப் பயணிகள் ரயில் எதுவும் வராததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.