கனமழை காரணமாக தெலங்கானாவில் நாளை முதல் 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றதன் காரணமாகவும், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருமாறு அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், தெலங்கானாவில் இன்றும், நாளையும் அதிகனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாளை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.