தெலுங்கானாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரில் புதன்கிழமையன்று, பிரகாஷ் என்பவர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்ய வீட்டின் வரவேற்பறையில் சார்ஜ் செய்துள்ளார். பின்னர் பிரகாஷும், அவரது மனைவியும் படுக்கையறையில் தூங்கியபோது, பிரகாஷின் பெற்றோர் ராமசாமி, அவரது மனைவி மற்றும் அவர்களது பேரன் கல்யாண் ஆகியோர் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்ட அறைக்கு அருகில் உள்ள அறையில் தூங்கியுள்ளனர்.
இந்தநிலையில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி அதிகாலை திடீரென வெடித்ததில் தீப்பிடித்து ராமசாமி, கமலம்மா மற்றும் கல்யாண் ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் நிஜாமாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முதியவரின் நிலை மோசமாடைந்த நிலையில்ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் ப்யூர் இவி நிறுவனம் மீது, ஐபிசி பிரிவு 304-ஏ (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்), 337 (உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயலால் காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.