states

img

தில்லியில் குவிந்த உலகத் தலைவர்கள்!

18-ஆவது ‘ஜி20’ உச்சி மாநாடு இன்று துவக்கம்
புதுதில்லி, செப். 8 - ‘ஜி-20’ கூட்டமைப்பிற்கு, நடப் பாண்டில் தலைமையேற்றுள்ள இந்தியா, கூட்டமைப்பின் 18-ஆவது உச்சி மாநாட்டை செப்டம்பர் 9, 10  தேதிகளில் புதுதில்லியில் நடத்துகிறது. புதுதில்லியில், சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் என்று அழைக்கப்படும் பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்ட பத்தில் சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு மாநாடு துவங்குகிறது. இதில், ஜி20 உச்சி மாநாட்டின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், விருந்தினர் நாடுகளின் பிரதிநிதிகள், சில சிறப்பு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சில பிராந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ‘ஜி20’ நாடுகள் கூட்டமைப்பில், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன. உலகப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதத்தையும், வர்த்தகத்தில் 75 சதவிகிதத்தையும், உலகமக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையையும் கொண்டிருக்கும் இந்த ‘ஜி-20’ நாடுகள்  கூட்டமைப்பானது, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வலி மையான கூட்டமைப்பாக பார்க்கப்படு கிறது. செப்டம்பர் 9, 20 ஆகிய தேதிகளில், இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில், விவசாயம், ஊழல் எதிர்ப்பு, காலநிலை, டிஜிட்டல் வர்த்த கம், கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்றல்,  சுற்றுச்சூழல், ஆரோக்கியம், சுற்றுலா,  வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இந்த 20 நாடுகளின் சார்பிலும், அந்நாட்டின் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.  வங்கதேசம், எகிப்து, மொரீ ஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நட்பு நாடு களுக்கும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 

விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே தலைவர்கள் ஒருவர்  பின் ஒருவராக தில்லிக்கு வருகை தர ஆரம்பித்தனர். அவர்களை, இந்திய அரசு சார்பில் ஒன்றிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். தில்லி விமான நிலையத்திலேயே பிரத்யேக மேடை அமைத்து, நடனக் கலைஞர்கள் மூலமாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அர்ஜெண்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், சர்வ தேச நாணய நிதியத்தின் மேலாண்  இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா,  மெக்சிகோ நாட்டின் பொருளாதாரத் துறை அமைச்சர் ரக்யூல் புயென் ரோஸ்ட்ரோ சான்செஸ், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளரான மேதியஸ் கார்மன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனி, ஆப்பிரிக்க யூனியன் தலை வர் அசாலி அசோவுமணி, பிரிட்டன்  பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய வெளியுற வுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ்,  தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் வெள்ளியன்று காலை தில்லி வந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பைடனுக்கு இரவு  விருந்தளித்த மோடி 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளியன்று மாலை தில்லி வந்தடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து அளித்தார். இரவு 7.30 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் ஜோ பைடன் - சந்திப்பு நடைபெற்றது. இரவு விருந்திற்குப் பின், இரு நாட்டுத் தலைவர்களும், அணுசக்தி, பாதுகாப்பு, விசா ஒப்பந்தங்கள் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பேச்சு நடத்தினர். முன்னதாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிர தமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோருடன் தனித்தனியாக பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோல், ஜெர்மனி ஜனாதிபதி ஓலாப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன், நைஜீரியாவின் ஜனாதிபதி போலா டினுபு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, சவூதி அரே பியா இளவரசர் முகமது பின் சல்மான்  உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளனர்.

புடின் - ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக சீன பிரதமர் லீ கே கியாங் பங்கேற்க உள்ளார். ரஷ்யா  ஜனாதிபதி புடினும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. புதினுக்குப் பதி லாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் வந்துள்ளார். ஸ்பெயின் ஜனாதிபதி பெட்ரோ சான்செசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை.

தலைநகரில் பலத்த பாதுகாப்பு 

உலக நாடுகளின் தலைவர்கள் வரு கையையொட்டி, தலைநகர் தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லியில் மயூர் விஹார், அக்சர்தாம், ஐடிஓ உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தில்லியே விழாக் கோலம் பூண்டுள்ளது. கௌடில்யா மார்க், சாணக்யபுரி உள்ளிட்ட பகுதி களில் தேசியப் பறவை, விலங்கு வடி வங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ளன. தில்லியின் முக்கிய இடங் களில் ஒன்றான ஜூம்மா மசூதி, குதுப் மினார் போன்றவை வண்ண விளக்கு கள் மற்றும் வண்ணக் குடைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. தில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலும், இந்திய தேசியக் கொடியை நினைவுபடுத்தும் விதமாக மூவண்ண விளக்குகளால் ஜொலிக்க விடப்பட்டு உள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் பலர் வரவுள்ள நிலையில் மொழி பெயர்ப்பு உதவிக்கு 100 பெண் தொழில் முனைவோர் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

ஜி-20 அமைப்பிற்கு தலைமையேற்கும் பிரேசில்

ஜி-20 அமைப்பிற்கு சுழற்சி முறை யில், அதன் உறுப்பு நாடுகள் தலைமை  பொறுப்பை ஏற்கும். அதன்படி 2021-ஆம் ஆண்டில் இந்தோனேசியா தலை மை வகித்தது. 2022 டிசம்பர் 1 அன்று இந்தியா தலையேற்றது. தற்போது உச்சி மாநாட்டையும் நடத்தி முடிக்க உள்ளது. இதையடுத்து, தில்லி மாநாட்டின் நிறைவில், செப்டம்பர் 10 அன்று தலைமை பதவியை பிரேசில் ஜனாதிபதி லூலாவிடம், இந்திய பிரதமர் மோடி ஒப்படைக்கிறார். அதைத் தொடர்ந்து, 2023 டிசம்பர் 1 அன்று பிரேசில் முறைப்படி ‘ஜி-20’ தலைவர் பதவியை ஏற்கும்.

அதானி, அம்பானி உள்ளிட்ட 500 முதலாளிகளுக்கு அழைப்பு

‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள உலகத் தலைவர்களுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  சனிக்கிழமையன்று இரவு விருந்து அளிக்கிறார்.  இந்திய முன்னாள் பிரதமர்கள், தற்போதைய மாநில முதல்வர்களும் விருந்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா, ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல், மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட 500 இந்திய பெருமுதலாளிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பங்கேற்க உள்ளனர்.  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளனர். 

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பில்லை

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே-வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “அவர்கள் (ஒன்றிய அரசு) எதிக்கட்சித் தலைவர்களை மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.