புதுதில்லி, ஆக. 18 - குஜராத் அரசின் தண்டனைக் குறைப்பு கொள்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு (பில்கிஸ் பானு வழக்கு குற்ற வாளிகள் 11 பேருக்கு) மட்டும் பயன் படுத்தப்பட்டது?; 14 ஆண்டுகளைக் கழித்த ஏனைய சிறைவாசிகள் ஏன் விடுதலை செய்யப்படவில்லை? என்று உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது. பில்கிஸ் பானு வழக்கு கோத்ரா நீதிமன்றத்தில் நடைபெறாத நிலையில், குற்றவாளிகளை விடுவிக்க, அந்த நீதி மன்றத்தின் கருத்து ஏன் கேட்கப்பட்டது? என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் உச்ச நீதிமன்றம், குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்ததை பொறுத்த வரையில், குஜராத் அரசு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், தண்டனைக் குறைப்பு அல்லது விடுதலைக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான- அதாவது, பில்கிஸ் வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான பரிந்துரை வழங்கிய சிறை ஆலோசனைக் குழு எதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது? என்பன போன்ற விவரங்களை தாக்கல் செய்யுமாறும் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.