states

வலியை அனுபவிக்கும் மக்களுக்கு எங்களின் ஆறுதலை தெரிவிக்கிறோம்

புதுதில்லி, ஜூலை 21 - மணிப்பூர் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை உலகளாவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவுக்கான  அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். மணிப்பூர் சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்திருக்கும் கார்செட்டி, “நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. இதைப்பற்றி நான் இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். ஆனால், நான் முன்பே கூறியது போல் உலகில் எங்கு மனித அவலம் நடந்தாலும் அதுகுறித்து நாங்கள் (அமெரிக்கா) வேதனையடைவோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “எங்கள் எண்ணங்கள் இந்திய மக்களுடன் உள்ளன. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. இத்தகைய வலி மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.