states

img

வணிகமயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்ய அமைச்சர் ஆர்.பிந்து வலியுறுத்தல்

புதுதில்லி, மே 1- ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, கல்வியை வணிக மயமாக்குவதாகவும், அதை நாடாளு மன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறியுள்ளார். புதுதில்லியில், தேசியக் கல்விக்  கொள்கைக்கு எதிராக அகில இந்திய மக்கள் அறிவியல் இணையம் நடத்திய தேசியக் கல்விப் பேரவை யின் தொடக்க விழாவில் அமைச்சர்  ஆர்.பிந்து பேசினார். அவர் பேசும் போது, தேசிய கல்விக் கொள்கை யானது நாட்டின் கூட்டாட்சிக் கொள்கைகளை சிறுமைப்படுத்தும் வகையில் மத்திய மயமாக்கலைத் திணிக்கிறது. உண்மையில் கல்விக் கொள்கை ஆவணத்தை உருவாக்க, முந்தைய கொள்கை ஆவணங்களின் தகுதி மற்றும் தீமைகள் ஆராயப்பட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையை வகுப்பதில் அந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. எந்த வொரு சமூக அமைப்பும் அல்லது  மக்கள் பிரதிநிதிகள் சபையும் இந்தக் கொள்கையை ஆய்வு செய்ய வில்லை. இது  அனைத்து  நாடாளு மன்ற நடைமுறைகளையும் புறக்கணித்து அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. யூஜிசி பொது மக்களின் கருத்தைத் தேடுவது போன்ற தோற்றத்தைக் கொடுத்தா லும், பெறப்பட்ட பதில்கள் எதையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ள வில்லை.

கிராமப்புற, பழங்குடி மாணவர்களை பாதிக்கும்

கல்லூரிகளின் இணைப்பு முறையை ஒழிக்கும் தேசியக் கல்விக்  கொள்கையானது கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்களை மிகவும் பாதிக்கச் செய்யும். உயர்கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டு மானால் உள்ளூர் அளவில் வசதிகள் அவசியம். இது தொடர்பாக தேசிய  கல்விக் கொள்கையில் கோரிக்கை கள் மட்டுமே உள்ளன. மக்களை மையப்படுத்திய அறிவு சமுதாயத்தை கேரளா உருவாக்கி வருகிறது. வளர்ந்த-முதலாளித்துவ நாடுகளில் பின்பற்றப்படும் மாதிரி அல்ல. அறிவு உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சியை சமூகத்தின் பரந்த தேவைகளுடன் இணைப்பதே கேரள மாதிரியின் முக்கியத்துவம் என்றும் அமைச்சர் கூறினார்.