states

ஒன்றிய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

புதுதில்லி, ஜூலை 31-  பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் தற்போது 29 கேபினட் அமைச்சர்கள் உள்ளனர். மேலும் 47 இணை அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய இரண்டு இணை  அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலின் போது, ஏற்கனவே ஒன்றிய அமைச்சர்களாக இருந்த எஃகு துறை அமைச்சர் ஆர்சிபி சிங் (ஐக்கிய ஜனதா தளம்), சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி (பாஜக) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  அதனால் அவர்கள் எம்பி தகுதியை இழக்க நேரிட்டது. இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த னர்.

தற்போது எஃகுத் துறை அமைச்சக த்தை ஜோதிராதித்ய சிந்தியாவும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தை ஸ்மிருதி இரானியும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.  2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த (ஆக. 12) பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும். தற்போது சிவசேனாவின் அதிருப்தி கோஷ்டியினர் பாஜக கூட்டணி யில் இணைந்துள்ளதால், அவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப் படும். அதேபோல், ஐக்கிய ஜனதா தளத்திற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.  தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சில கட்சிகளுக்கு மட்டுமே கேபினட் அமைச்சர்கள் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் நடக்கும்போது, கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் போது, சுமார் 12 அமைச்சர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.