புதுதில்லி, நவ. 9 - இந்திய உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் (62) புதன்கிழமையன்று பதவி யேற்றுக் கொண்டார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உணவு மற்றும் பொதுவிநி யோகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புதிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 1959- ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவரது முழுப்பெயர் தனஞ்ஜெயா யஷ்வந்த் சந்திரசூட் என்பதாகும். சந்திரசூட்டின் தந்தையான ஒய்.வி. சந்திரசூட் எனப் படும் யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட்டும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக இருந்தவர். அத்துடன் இந்தியாவில் நீண்டகாலத்திற்கு (7 ஆண்டுகள் 139 நாட்கள்) தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். சந்திரசூட்டின் தாயார்
பிரபா இசைக் கலைஞர். சட்டத்தில் முனைவர் பட்டம்
மும்பையில் உள்ள கதிட்ரல் ஜான் கோனன் பள்ளியிலும், தில்லியில் செயிண்ட் கொலும்பா பள்ளியிலும் கல்வி பயின்ற டி.ஒய். சந்திரசூட், தில்லி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பொருளாதாரத்திலும், கணிதத்திலும் பட்டப் படிப்பை முடித்து, 1982-ஆம் ஆண்டு தில்லி சட்டப் பல்கலைக்கழ கத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 1983-ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அப்போது, ஜோசப் எச்.பீலே பரிசை வென்ற அவர், 1986- ஆம் ஆண்டு சட்டப்படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றார்.
அமெரிக்காவில் வழக்கறிஞர் பணி
தில்லியில் சட்டக்கல்லூரியில் பயின்றபோதே ஜூனியர் வழக்கறி ஞராக பயிற்சி பெற ஆரம்பித்திருந்த சந்திரசூட், ஹார்வர்டு பல்கலைக்கழ கத்தில் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சல்லிவன் மற்றும் க்ரோம்வெலில் வழக்கறிஞராக பணியாற்றினார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்தியா திரும்பிய பிறகு உச்ச நீதி மன்றம் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்கறிஞராக பணியாற்றத் துவங்கி, 1998-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார். அதைத்தொடர்ந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட நிலையில், அதிலும் திறம்பட பணி யாற்றினார். பல்வேறு நாடுகளின் சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு சட்ட வல்லுநராக சிறப்பு வகுப்புகளையும் எடுத்துள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
2000-ஆவது ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்கப்பட்ட சந்திரசூட், 2013- ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டார். அதைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல்- உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை யும், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளையும் பரிந்துரை செய்யும்- உச்சநீதிமன்ற கொலீஜி யத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே, தற்போது அவர் 2022 அக்டோபர் 17 அன்று இந்திய உச்சநீதி மன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 49-ஆவது தலைமை நீதிபதி யு.யு. லலித், நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதி யாக நவம்பர் 9-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டுள்ளார். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை 2 ஆண்டுகளுக்கு இப்பதவியை வகிப்பார்.
முக்கியமான தீர்ப்புகளை வழங்கிய டி.ஒய். சந்திரசூட்
நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ள டி.ஒய். சந்திரசூட், சிக்கலான பல வழக்கு களில் முக்கியமான தீர்ப்புகளை வழங்கியவர். கடந்த 2016- ஆம் ஆண்டு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யப்பட்ட டி.ஒய். சந்திரசூட், அக்டோபர் 19 வரை 1057 அமர்வுகளில் சக நீதிபதிகளுடன் 513 தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதிகபட்சமாக 94 சேவை வழக்குகளிலும் 89 குற்ற வழக்குகளிலும் சந்திரசூட் தீர்ப்பளித்து உள்ளார். அரசியலமைப்பு வழக்குகளில் 45 தீர்ப்புகளையும், சிவில் வழக்குகளில் 56 தீர்ப்புகளையும், நுகர்வோர் வழக்குகளில் 37 தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.
‘தன்பாலுறவு குற்றமல்ல!’
‘தன்பால் உறவு குற்றம் எனும் 377-ஆவது சட்டப்பிரிவு’க்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த அமர்வில் இடம்பெற்ற சந்திரசூட், “இந்த சட்டத்தை எதேச்சதிகாரம் கொண்ட காலனியாதிக்க சட்டம்” என்று விமர்சித்தார். மேலும், “இந்தச் சட்டம் சம உரிமை, கருத்து சுதந்திரம், வாழ்க்கை மற்றும் தனியுரிமைக்கு எதிராக உள்ளது” என்றும் “பால் புதுமையர் (LGBTQ) சமூகத்தினருக்கும் அரசியலமைப்பு உரிமை உள்ளது” என்று தீர்ப்பு வழங்கினார்.
‘வயது வந்த பெண்ணுக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு’
கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவி ஹாதியா, இஸ்லாமிய மதத்துக்கு மாறி ஷபீன் ஜஹானை திருமணம் செய்தது தொடர்பான (லவ் ஜிகாத் குற்றச்சாட்டு) வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதையும், எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் முடிவெடுக்கும் உரிமை வயது வந்த பெண்ணுக்கு உள்ளது” என்று கூறி ஹாதியா - ஷபீன் ஜஹான் திருமணம் செல்லும் என தீர்ப்பளித்தார்.
‘கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பது சட்டத்திற்கு புறம்பானது’
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், “10 முதல் 50 வயது வரை யிலான பெண்களை கோயிலுக்குள் அனு மதிக்காதது, அரசியலமைப்புச் சட்டத்தையும், தீண்டாமையை தடைசெய்யும் சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. பெண்களின் சுய உரிமை, சுதந்திரம், கண்ணியத்தை இது சீர்குலைக்கிறது” என விமர்சித்தார்.
‘ஆளுநருக்கென்று தனி அதிகாரம் இல்லை’
தில்லி அரசில் துணை நிலை ஆளுநரின் தலையீடு தொடர்பான வழக்கை விசாரித்த சந்திரசூட், “ஆளுநர் தில்லியின் நிர்வாகத் தலைவர் கிடையாது. ஜனநாயகம் என்பதே நிர்வாகத்தின் தவிர்க்க முடியாத அம்சம். எனவே நிர்வாகத்தை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குழுவே வழிநடத்த வேண்டும். முதலமைச்சரின் உத்தரவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அவருக்கென ஜனநாயகத்தில் சுதந்திரமான அதிகாரம் இல்லை” என்று தீர்ப்பளித்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்கு எதிரான சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெஹ்சீன் பூனாவாலா வழக்கு தொடர்ந்த நிலை யில், அந்த வழக்கை விசாரித்த சந்திரசூட் வழக்கை தள்ளுபடி செய்தார்.
பதவியேற்பு விழாவை புறக்கணித்த பிரதமர் மோடி
நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வில்லை. முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் பதவியேற்பு முதற்கொண்டு, அனைத்து தலைமை நீதிபதிகளின் பதவி யேற்பு விழாக்களிலும் பிரதமர் மோடி தவறா மல் கலந்து கொண்டுள்ளார். ஆனால், 50-ஆவது தலைமை நீதிபதி சந்திரசூட் பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்காதது விவா தத்திற்கு உள்ளாகி இருக்கிறது.