states

img

‘ஒரு உடலுக்கு இரண்டு வாக்கு’

சண்டிகர், பிப்.20- பஞ்சாப் தேர்தலில் ஒட்டிப்பிறந்த இரட்டையார்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா இருவரும் தனித்தனியாக வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பஞ்சாப் சட்டசபைக்கு ஞாயிறன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.  இத் தேர்தலில் அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாக்களித்த நிகழ்வு அனைவரையும் கவர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ் கருணா ராஜூ, இவர்கள் இருவரும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என ஏற்கெனவே கூறியிருந்தார். இதுகுறித்து பஞ்சாப் மாநில அரசு மக்கள் தொடர்பு அதிகாரி கவுரவ்குமார் கூறுகையில், பஞ்சாப் அமிர்தரஸ் மணவாலாவில் உள்ள வாக்குச் சாவடி எண்.101-இல் ஒட்டிப்பிறந்த இரட்டையார்களான சோஹன் சிங் மற்றும் மோஹன் சிங் வாக்களித்தனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பட்டியலின் கீழ் வாக்களித்த இவர்களது வாக்குப்பதிவை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இவர்களது உடல் ஒட்டி இணைந்திருந்தாலும் இரண்டு தனி வாக்காளர்களாக கருதப்படுவர். அவர்களின் வாக்குகளின் ரகசியம் காக்கப்பட கருப்புக் கண்ணாடிகளுடன் கூடிய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று தெரிவித்தார். சோஹன்-மோஹன் ஆகியோருக்கு இரண்டு இதயங்கள், இரண்டு ஜோடி கைகள், சிறுநீரகங்கள் மற்றும் முதுகெலும்புகள் உள்ளன, ஆனால் ஒரே கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் மற்றும் ஒரு ஜோடி கால்கள் உள்ளன.  இரண்டு மூளைகள் உள்ளன. இவர்கள் இருவரும் 2003-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி புது தில்லியின் சுசேதா கிரிப்லானி மருத்துவமனையில் பிறந்தனர். இருவருமே டிப்ளோமா (எலக்ட்ரிக்கல்) பிடித்துள்ளனர். தற்போது பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ரெகுலர் டி மேட் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.