states

img

சிபிஐ, அமலாக்க பிரிவை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்!

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கோரிக்கை

புதுதில்லி, ஏப். 4 - ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்துவதுடன், அவை தவறு செய்தால் தண்டிக்கவும் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்தியப் புலனாய்வுக் கழகம் (CBI), தில்லியில் ஏற்பாடு செய்திருந்த 19-ஆவது டி.பி. கோலி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்றுப் பேசினார். அப்போது, “மாநிலங்களில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தாங்கள் ஒவ்வொரு புதிய ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கும் ஆளாவதாக புகார் தெரிவித்து காவல்துறையினா் நீதிமன்றத்தை அணுகுவது தொடா் நிகழ்வாகி வருகிறது. ஆட்சியில் இருப்பவா்களின் நன்மதிப்பை, அன்பை பெறும் வகையில் நீங்கள் (காவல்துறையினர்) செயல்படுகின்றபோது, அதனால், ஏற்படும் விளைவுகளையும் நீங்கள் சந்தித்தாக வேண்டும். மேலும், சில வழக்குகளில் சிபிஐ-யின் நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே, பல்வேறு புலனாய்வு அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் வகையில் தனி அதிகாரம் படைத்த தலைமை அமைப்பை உருவாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித் தொடா்பாளருமான ரன்தீப் சிங் சுா்ஜேவாலா தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “தோ்தல் எதிரிகள் மீது அடக்குமுறையை ஏவும் வகையில் சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன என்பதை தலைமை நீதிபதியும் ஒவ்வொரு குடிமக்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தில் தோ்தலை எதிர்கொள்வதற்காக பாஜக-வும் பிரதமா் மோடியும் செல்வதற்கு முன்பாக, அந்த மாநிலத்துக்கு சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவை முதலில் சென்றுவிடுகின்றன. அந்த அளவுக்கு ஆட்சியில் இருப்பவா்களின் கைப்பாவையாக இந்த அமைப்புகள் செயல்படுகின்றன. ஆட்சியில் அமா்ந்திருப்பவா்கள் அரசியல் சாசனத்தையும், சட்ட விதிகளையும் மதிக்காமல் அவற்றை நசுக்குகின்றபோது, நீதிமன்றத்தில் அமா்ந்துகொண்டு இதுபோன்ற கடுமையான வார்த்தைகளில் தலைமை நீதிபதி கருத்து தெரிவிப்பது மட்டும் போதாது. தலைமை நீதிபதியும், சக உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 136-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தங்களுக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறைகளைக் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.” இவ்வாறு ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.