states

img

ஜனாதிபதி பதவி சம்பிரதாயமானது; பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பி.க்கு கூட இடமில்லை என்பதே யதார்த்தம்

புதுதில்லி, அக். 26 - இனவெறி நிலவிய பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்து மதத்தை பின்பற்றும் ரிஷி சுனக் பிரதமராகி உள்ள நிலையில் சோனியாவை புறம்தள்ளிய இந்தியா பிரிட்டனிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகி உள்ளார். இது நல்ல விஷயம். வரவேற்கத்தக்கது. இதில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும். இந்தியாவில் இந்து, சீக்கியர், பவுத்தர் அல்லது ஜைனர் அல்லாத ஒருவர் பிரதமராக முடியுமா?.  இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பது வார்த்தை அளவில் மட்டும் தான் உள்ளது. இந்தியாவில் முஸ்லிம்கள் குடியரசுத் தலைவர்களாக இருந்துள்ளனர். இருப்பினும் இது சம்பிரதாய பொறுப்புதான். இதை கூறினால் காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் பிரதம ராக இருந்தாரே. அவர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்தானே என கூறுவார்கள். ஆனால் பெரும்பாலான இந்துக்கள் சீக்கியர்களை வித்தியாசப்படுத்தி பார்ப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது பெரும்பான்மைவாத அரசியல் அதி கரித்து வருகிறது. குறிப்பாக பாஜக மிகவும் பிற்போக்காக உள்ளது. பாஜக-வில் இந்து, ஜெயின் அல்லது சீக்கியர் அல்லது பவுத்தர் அல் லாத ஒருவர் பிரதமராக வருவதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?. தற்போ தைய சூழலில் பாஜக-வுக்கு ஒரு முஸ்லிம் எம்பி  கூட இல்லை. சோனியா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட பிரதமர் பதவிக்கு முயன்ற போது இத்தாலியை சேர்ந்தவர், அவர் பிறப்பால்  கிறிஸ்தவர் என கூறினார்கள். இதையடுத்துத்தான் மன்மோகன் சிங் பிரதமரானார். மேலும் பாஜக- வின் அப்போதைய மூத்த தலைவர் ஒருவர்  (சுஷ்மா சுவராஜ்) சோனியா காந்தி பிரதமரா னால் மொட்டையடித்து கொள்வேன் என கூறி னார்.  பிரிட்டிஷ் இனவெறியை விமர்சிக்கும் நபராக நான் இருந்தேன். வெளிப்படையாக இனவெறி வரலாறு என்பது பிரிட்டிஷ்காரர்களுக்கு உண்டு.

ஆனால் ஒரு இந்து-வை தங்கள் நாட்டின் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தங்களின் மோசமான பண்புகளை கைவிட்டதாக எண்ணுகிறேன். ஏனென்றால் ஒரு  காலத்தில் தரம் தாழ்ந்தவர்கள் என்று அவர்கள் கருதிய ஒரு இனத்தை சேர்ந்தவரை தற்போது அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளனர்.  பிரிட்டன் பிரதமராக உள்ள ரிஷி சுனக் இந்து  மதத்தை வெளிப்படையாக பின்பற்றி வருகிறார்.  அவரது தேர்வை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். அதோடு இத்தகைய தேர்வு என்பது நம்நாட்டில் உள்ள அரசியல் நிலை பற்றி சிந்திக்க வைக்கும் என நினைக்கிறேன். மேலும் ரிஷி சுனக்கின் வெற்றியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடியது என்னவென்றால் ஒருநபரின் இனத்தை வைத்து மட்டுமே தலைமை பண்புக்கு வருவதை தடுக்கக் கூடாது என்பதுதான். மேலும் ரிஷி சுனக்கின் வயதும் முக்கியமான ஒன்றாக உள்ளது. 42 வயதில் பிரிட்டனின் இளம்  பிரதமராக அவர் உள்ளார். இந்த விஷயத்தில் இந்தியாவில் பாஜக மட்டுமின்றி அனைத்து கட்சிகளையும் குற்றம்சாட்டுவேன். இந்தியாவில் வயது குறைந்தவர்கள் இத்தகைய பதவிக்கு வருவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.’’ இவ்வாறு சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.