புதுதில்லி, ஏப். 20 - பாஜக-வின் பழிவாங்கல் அரசியல் காரணமாக, தில்லி ஜஹாங்கீர் புரி இஸ்லாமியர்கள் ஒரே நாளில் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தெருவிற்கு வந்துள்ளனர். திடீரென வந்து அதிகாரிகள் கடையை இடிக்க தொடங்கியதும், கடையில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒன்றுமே செய்ய முடியாமல் இப்போது வரை அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அனைவரும் சிறு வியாபாரிகள், ஏழைகள் என்ற நிலையில், கடையில் இருந்த பொருட்களை எடுக்க கூட நேரம் கொடுக்காமல் பல இடங்களில் புல்டோசர் உதவியுடன் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டு உள்ளன. இதில், ஜூஸ் கடை வைத்திருக்கும் நபர் ஒருவரின் கடையும் செவ்வாயன்று இடிக்கப்பட்டது. கடை இடிக்கப்பட்டது தெரிந்ததும், அந்த கடை வைத்து இருந்தவரின் மகன் வேகமாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்து அங்கேயே அமர்ந்து அழுத காட்சிகள் அங்கு சுற்றி இருந்தவர்களை கலங்க வைத்தது. அதோடு இல்லாமல் அந்த சிறுவன் இடிக்கப்பட்ட தனது அப்பாவின் கடையில் கீழே சிதறிக்கிடக்கும் சில்லரைக் காசுகளையும், ஜூஸ் பாக்கெட்டுகளை கண்ணீருடன் பொறுக்கிய நிகழ்வு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்தது. சில மணிநேரங்களில் இல்லாமல் போன தனது அப்பாவின் கடையில் அந்தச் சிறுவன் காசுகளை பொறுக்கிக்கொண்டு இருந்த காட்சி புகைப்படமாக சமூகவலைதளங்களிலும் வைரல்ஆனது.