சென்னை, பிப். 20- உழவர்களைத் தடுக்க சாலை களில் ஆணியைப் புதைக்கும் அரசாக பாஜக அரசு இருக்கிறது ஆனால் உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டும் அல்லாது அதனைத் தொழிலாக மட்டும் கருதுப வர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்தது தான் வேளாண்மையாகும். அதனால் தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக் கையை தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும், மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக 2024 -25-ஆம் ஆண்டுக் கான வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ரசாயன உரங்களை குறைக்க முயற்சி
மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண் போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ அமைந்துள்ளது. ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணி லுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிக ளையும் அரசு எடுத்து வருகிறது. ரசாயன உரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெற்பயிரில் ரசாயன மருந்துகளை குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
மரபுசார் நெல் ரகங்கள்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது 2400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உயர்த்தப் போகிறது. மரபுசார் நெல் ரகங்களை ஊக்குவிக்கப் போகிறோம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் மையங்களை உருவாக்க இருக்கி றோம். இயற்கைச் சீற்றங்களால் உழவர் களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் ரூ.1,775 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ என்ற திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது.'
1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகள்
10 ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அதிமுக அரசு கிடப்பில் போட்டு வைத் திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டு களில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை திமுக அரசு வழங்கியுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம். நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 கூடுதலாக வழங்கப்பட்டுள் ளது. ‘உழவர்கள்’ மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில் துறையைப் போல அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது..
பின்வாங்கிய பாஜக
3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் தில்லியில் தங்கிப் போராடினார்கள் உழவர்கள். அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பாஜக அரசு. இப்போது மீண்டும் தில்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அவர்கள் மீது இரக்க மற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது. உழவர்களைத் தடுக்க சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பாஜக அரசு உள்ளது. அதே நேரத்தில் உழவர் பெரு மக்களது வாழ்வுக்கும் மேன்மைக்கு மான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் திமுக அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கி றோம் என்பதை அனைவரும் அறியலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.