புதுதில்லி, பிப்.13- இளம் விஞ்ஞானிகள் ஊக்கத் திட்டத்தின்கீழ் உதவித்தொகைகள் வழங்குவதற்கான தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்திட அரசு ஆய்வு செய்துவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது பி.ஆர்.நடராஜன், கேவிபிஒய் (KVPY) என்னும் இளம் விஞ்ஞானிகள் ஊக்கத் திட்டத்தின்கீழ் தேசிய அளவிலான அறிவியல் ஃபெலோஷிப்புக்கான தேர்வுகள் நாட்டின் மாநில மொழிகள் அனைத்திலும் நடைபெறுகிறதா? அதன் விவரங்கள் என்ன? இல்லையெனில் எதிர்காலத்தில் அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்திட அரசு பரிசீலனை செய்திடுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், தற்சமயம் அறிவியல் ஃபெலோஷிப்புக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்டு வருவதாகவும், மற்ற மொழிகளில்இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் மேலும், இதற்கான தகுதித்தேர்வு என்பது அறிவியல் கற்கும் மாணவர்களுக்கானது என்றும், எனவே இது அறிவியல் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளதால், அரசமைப்புச்சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் எத்தனை மொழிகளில் முடியுமோ அத்தனை மொழிகளில் நடத்திட அரசு ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். (ந.நி.)