தில்லி ஷாகீன் பாக்கில் பொதுமக்களின் எதிர்ப்பால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில் பொதுஇடங்கள் ஆக்கிரமித்து குடியிருப்புகள், மற்றும் பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தில்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் அறிவிப்பு ஏதுமின்றி புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மோடி அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டது. திட்டமிட்டு பாஜக தலைமையிலான உள்ளாட்சி நிர்வாகம் கடைகளை இடிக்க முயல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
உள்ளாட்சி நிர்வாகத்தின் இடிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
ஷாகின் பாக் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமதுல்லா கானும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டார்.
எம்.எல்.ஏ. அமதுல்லா கான் அதிகாரிகள் கொண்டு வந்த புல்டோசர் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கான், எனது கோரிக்கையை ஏற்று இப்பகுதி மக்கள் ஆக்கிரமித்த இடத்தில் இருந்து விலகிவிட்டனர். இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்திற்கு வெளியே இருந்த கழிவறை மற்றும் உடல் சுத்தம் செய்யும் அறை போலீஸ் முன்னிலையில் அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு இல்லாதபோது, காவல் துறையினர் ஏன் இங்கு வரவேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் தில்லி ஷாகீன்பாக்கில் பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் தொடங்கிய நிலையில் வேறுவழியின்றி நிறுத்தியுள்ளனர்.
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் டெல்லி ஷாகீன்பாக் போராட்டம் நாட்டின் பல பகுதிகளில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.