states

img

ஆயுதப்படைச் சட்டத்திற்கு எதிராக போர்க்களமாகும் நாகாலாந்து

கோஹிமா, டிச.18- நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில், 14 அப்பாவி பொதுமக்களை இந்திய ராணுவமே சுட்டுக் கொன்றது, அண்மையில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு ராணுவம் மன்னிப்பு கேட்டாலும், இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க, ராணுவம் உள்ளிட்ட ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதுதான் ஒரே வழி என்று நாகாலாந்து மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஒன்றிய பாஜக அரசு அதனை இதுவரை ஏற்காத நிலையில், நாகாலாந்து மக்கள் மாநிலத்தையே போராட்டக் களமாக மாற்றி வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் கோஹிமாவில் நாகா மாணவர் கூட்டமைப்பு தலைமையில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். “கொல்லப்பட்ட 14 உயிர்களுக்கு நீதி வேண்டும்; ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; இந்தச் சட்டம் இனியும் தொடர்வது பேயைப் பேணிக் காப்பதற்கே ஒப்பானது; எத்தனை துப்பாக்கிச் சூடுகள் நடந்த பின்பு இந்தச் சட்டத்தை நீக்குவதாக உத்தேசம்..? சட்டத்தை தடை செய்வதற்குப் பதிலாக எங்கள் குரலை ஒடுக்க முயற்சிக்க வேண்டாம்..” என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர்.

 இதேபோல மாவட்டங்கள் தோறும் ஆயுதச் சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர்.  நாகாலாந்தின் கிழக்குப் பகுதியில் வியாழக்கிழமை முதல் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மோன் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை பந்த் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் தடைபட்டது. கிஃபிர், ட்யூன்சாங், நோக்லக் மற்றும் லாங்லெங் மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. தன்னெழுச்சியாக திரளும் மக்கள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதைப் போல் தெருவில் இறங்கியுள்ளனர்.  அவர்கள் தங்களின் கோரிக்கைகளில் ஒன்றான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.  அது மட்டுமல்லாது டிசம்பர் 6-ஆம் தேதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா-வால் நாடாளுமன்றத்தில் தாக்கப்பட்ட பொய்யான மற்றும் புனையப்பட்ட அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் முழக்கமிட்டு வருகின்றனர். சில இடங்களில் அமித்ஷாவின் உருவ பொம்மைகளை எரித்தும் மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை திரும்பப் பெறவேண்டுமென நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோரும் வலியுறுத்தி வருகின்றனர்.