states

img

ஏகாதிபத்திய எதிர்ப்பில் நிகரகுவா!

OAS (Organization of American States) அமெரிக்க கண்ட நாடுகளின் அமைப்பு எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க கண்டத்தில் உள்ள 35 நாடுகளை ஒற்றுமைப் படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஆனால் நடை முறையில் பல நாடுகளில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பு சதிச் செயல்களுக்குப் பின்னால் ஓஏஎஸ் -இன் நீசக்கரம் உள்ளது என பல லத்தீன் அமெரிக்க நாடுகள் கண்டித்துள் ளன. வெனிசுலாவில் தன்னை தானே ஜனாதிபதி என அறி வித்துக் கொண்ட யுவான் குவாய்டோவை ஓஏஎஸ் அங்கீகரித்தது. 2021 நவம்பரில் நிகரகுவா ஜனாதிபதிக்கு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரியான டேனியல் ஒர்டேகா (சான்டினிஸ்டோ தேசிய விடுதலை முன்னணி கட்சியை சார்ந்தவர்) 75.8 சதவிகித வாக்கு பெற்று ஐந்தாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். ஒஏஎஸ் அமைப்பு இதை அங்கீகரிக்கவில்லை. ஏற்கனவே வெனிசுலா ஒஏஎஸ் அமைப்பிலிருந்து விலகிவிட்டது. நிகரகுவா 2021 நவம்பர் 19-ல் இருந்து விலகுவதாக அறிவித்தது.

ஒஏஎஸ்- லிருந்து விலக வேண்டுமெனில் இரண்டு ஆண்டுக்கு முன்னதாக தெரிவிக்க  வேண்டும். ஆனால் நிகரகுவா 5மாதத்திலேயே விலகிக் கொண்டதை உறுதிப்படுத்தி ஏப்ரல் 24-ல் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒஏஎஸ், அமெரிக்க அரசின் தலையீடுகள் மற்றும் மேலாதிக்கத்துக்காக பயன்படுத்தப்படும் ஓர் அரசியல் கருவி எனவும் நிகரகுவா அறிக்கை கூறுகிறது. நிகரகுவாவின் தலைநகரம் மனாகுவாவில் உள்ள ஒஏஎஸ் அலுவலகம் மூடப்பட்டுவிட்டது. அமெரிக்க நாடுகளின் நீதிமன்றத்தில், மனித உரிமை கமிஷனில் நிகரகுவா-விற்கு இனிமேல் பிரதிநிதித்துவம் இருக்காது .அமெரிக்க நாடுகளின் வளர்ச்சி வங்கியின் நிதி வசதியையும் பெறமுடியாது . லத்தீன் அமெரிக்க மக்களின் பொலிவாரிய கூட்டணி, நிகரகுவா அரசு எடுத்துள்ள முடிவை மனதார பாராட்டி உள்ளது. கண்ணியமான, நாட்டின் இறையாண்மை காக்கும் முடிவு எனவும், சட்டப்பூர்வமான நிகரகுவா அரசிற்கு எதிரான தாக்குதல்களை கண்டிக்கிறோம் எனவும் அறிக்கை விட்டுள்ளது.