states

img

ஈஸ்வரப்பா தண்டிக்கப்பட வேண்டும்! என் கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்!

பெலகாவி, ஏப். 15 - ‘இந்து யுவ வாஹினி’ என்ற சங்-பரிவார் அமைப்பின் முக்கியத் தலை வரும், அரசுத்துறை காண்டிராக்டருமான சந்தோஷ் பாட்டீல் (40), கடந்த 2 நாட்களுக்கு, முன் தனியார் விடுதியொன்றில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, “சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்ட வகையில், கர்நாடக அரசு எனக்கு ரூ. 4 கோடி பாக்கி வைத்திருந்தது. இதனைக் கேட்டபோது, பில் தொகை ரூ. 4 கோடியில், 40 சத விகிதத்தை (ரூ. 1 கோடியே 60 லட்சம்) லஞ்சமாக தந்தால் மட்டுமே பாக்கிப் பணம் விடுவிக்கப்படும் என்று கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கூறிவிட்டார். கடன் வாங்கியே தான், சாலைப் பணிகளை மேற்கொண்டதால், அதனைத் திருப்பித் தரமுடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி தருகின்றனர்.

இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாதான் காரணம்” என்று சந்தோஷ் பாட்டீல் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்தார். இது கர்நாடக அரசியலில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அமைச்சர் ஈஸ்வரப்பாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதனிடையே, ‘என் கணவரின் மரணத்திற்கு நீதி வேண்டும்; அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தண்டிக்கப்பட வேண்டும்’ என்று சந்தோஷ் பாட்டீலின் மனைவி ஜெயஸ்ரீ ஊடகங்கள் முன்பு கண்ணீருடன் கூறியுள்ளார். “என் கணவரின் மரணம் தற்கொலை அல்ல... அது கொலை.. என் கணவரின் சாவுக்கு காரணமான ஈஸ்வரப்பா தண்டிக்கப்பட வேண்டும். வெளியில் கடன் வாங்கியே  காண்டிராக்ட் எடுத்தோம். பணம் திரும்ப  வந்ததும், அந்தப் பணத்தில் வீடு கட்டி குடியேற நினைத்தோம். ஆனால் அவர் எங்களையெல்லாம் விட்டுவிட்டு நிரந்தரமாக பிரிந்து விட்டார். நானும் எனது மகனும் அநாதை ஆகிவிட்டோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று ஜெயஸ்ரீ பாட்டீல் கூறியுள்ளார். அதேபோல, சந்தோஷ் பாட்டீலின் தாயாரும், “எனக்கு என் மகன் வேண்டும், அவன் தற்கொலை செய்துகொள்பவன் அல்ல., அவன் சாவுக்கு நீதி வேண்டும்” என அழுகையுடன் கூறியுள்ளார்.