states

img

கொல்கத்தாவில் மாணவர்கள் மாபெரும் கண்டன பேரணி

கொல்கத்தா, செப்.3- ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் மேற்குவங்கத்தில் பணி நியமன ஊழலுக்கு எதிராக கொல்கத்தாவில் மாணவர்கள் மாபெரும் பேரணி நடத்தினர். மேற்குவங்கத்தின் கிழக்குப் பகுதி, வடகிழக்குப் பகுதிகளில் இந்திய மாணவர் சங்கம் நடத்திய தொடர் பேரணிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் கொல்கத்தாவில் ஹவுரா, சீல்டா, ஹூக்ளி, ஷியாம்பஜார் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்ட நான்கு பேரணிகள் கொல்கத்தாவின் கல்லூரி சாலையை அடைந்தன.பேரணியில் சுமார் 10,000 பேர் கலந்துகொண்டனர். திரிபுரா, அசாம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர் தலைவர்களும் கலந்துகொண்டனர். பேரணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்க மேற்குவங்க மாநில செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, ‘‘ஒன்றிய அரசின் புதியகல்விக் கொள்கை ஆர்எஸ்எஸ்ஸின் மூளையால் உருவானது. அதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்.  நாங்கள் மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்துள்ளோம். அதன் உள்ளடக்கத்தை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். பட்டியல் சமூக மாணவர்களின் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும். பெண்கள், பட்டியல் வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு அதிகரிக்க வேண்டும். விரைவில், மேற்குவங்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த வலியுறுத்தி மாணவர் சங்கம் தொடர் இயக்கங்களை நடத்த உள்ளது’’ என்றார்.

மம்தாவின்  புகாருக்கு பதிலடி

இந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய மேற்குவங்க இடது முன்னணி தலைவரும் இந்திய மாணவர் சங்க ஸ்தாபகத் தலைவருமான பிமன்பாசு, “மேற்குவங்கத்தில் இடதுமுன்னணி ஆட்சி செய்த போதும் அரசுப் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக மம்தா பானர்ஜி கூறுகிறார். இது ஒரு அப்பட்டமான பொய். ஆசிரியர் நியமன ஊழலில் திரிணாமுல் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டதால்,  34 ஆண்டு கால ஆட்சியில் கட்சித் தலைவர்கள் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் அரசு வேலைகளை இடது முன்னணி  அரசு வழங்கியதாக மம்தா குற்றம் சாட்டி வருகிறார். திரிணாமுல்லில் உள்ள அனைவரையும் திருடன் என்று அழைப்பது சரியாக இருக்காது. திரிணாமுல் தலைவர்களை திருடர்கள் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். தாங்கள் செய்த தவறை மூடிமறைக்க இடது முன்னணி மீது பழி போடுகிறார் மம்தா. சிகரெட் பாக்கெட்டுகளின் அட்டைகளில் எழுதப்பட்டதன் அடிப்படையில் அரசு வேலைகள் வழங்கப்பட்டது 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற  சித்தார்த்த சங்கர் ரே (காங்கிரஸ்) ஆட்சியின் போது தான்’’ என்று மம்தாவின் புகார்களுக்கு பதிலடிகொடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முகம்மதுசலீம், மூத்த தலைவர்கள் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா எம்.பி., சுஜன் சக்கரவர்த்தி ஆகியோர், மம்தா கூறுவதில் உண்மையிருந்தால் ஆதாரங்களை வெளியிடட்டும். இது குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க மம்தா தயாரா என சவால் விடுத்தனர்.