நாடு முழுதும் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க வகைசெய்யும் மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவை எதிர்த்து புதன் அன்று தலைநகர் புதுதில்லியில் மின்ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு தேசிய மின்சார ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருந்தது.
மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவு மிகவும் ஜனநாயகவிரோதமான முறையில் சென்ற மக்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக நாடு முழுதும் மின் ஊழியர்கள்-பொறியாளர்கள் மத்தியில் கடும் கோபாவேசம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இந்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நாடாளுமன்ற வீதியில் இந்த பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசாங்கம் ஏற்கனவே தாத்ரா நகர் ஹாவெலி, டாமன் மற்றும் டையு யூனியன் பிரதேசத்தில் மின் துறையைத் தனியாரிடம அளித்துள்ளது. சண்டிகார் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களில் தனியார்மயத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
தமிழகத்திலிருந்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றார்கள்.
மின்ஊழியர்-பொறியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒன்றிய அரசாங்கம் இச்சட்டமுன்வடிவைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் தீவிரமாகும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.