2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர். ஒவ்வொரு தேர்தலிலும் சில உள்ளூர் காரணிகள் கவனம் பெற்று ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இப்போது நாடு முழுவதுமே ஒருவித அழுத்தம் உருவாகியுள்ளது. கடந்த மாதம் பெங்களூருவில் “இந்தியா” கூட்டணி ஆலோசனை நடத்தியபோது தேசிய ஜனநாயக கூட்டணி பயந்துவிட்டது. பிரதமர் மோடி இன்னும் ஆணவத்துடனேயே இருக்கக் கூடாது. 2014இல் அவர் ஆட்சிக்கு வந்தபோது 31% வாக்குகளையே பெற்றிருந்தார். மீதமுள்ள 69 சதவீத வாக்குகள் அவருக்கு எதிராகவே இருந்தன. 2024 தேர்தலில் 50 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெறுவோம் என்று மோடி வேண்டுமானால் நம்பிக்கை தெரிவிக்கலாம். ஆனால் அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பில்லை. மோடி புகழின் உச்சியில் இருந்தபோதே அவரால் 50 சதவீத வாக்குகளைப் பெற இயலவில்லை. எனவே 2024 தேர்தலில் இந்த சதவீதம் இன்னும் குறையவே செய்யும். 2024 தேர்தல் முடிவுகள் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும். ஒரு ஜனநாயகத்தில் எதிர்காலத்தைப் பற்றி ஆரூடம் கூறுவதுபோல் வெற்று கணிப்புகளைக் கூறுவது சாத்தியமே இல்லை. ஆனால் மோடியின் பேச்சுக்கள் அனைத்தும் அப்படித்தான் உள்ளன. பிரதமர் மோடி நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டார். ஆனால் அவை என்னவானது என்பது மக்களுக்கு தெரியும்.
இராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்