states

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி கணித்ததைக் காட்டிலும் விலைவாசி உயரும்

புதுதில்லி, ஏப். 8 - இந்திய ரிசர்வ் வங்கியானது, 11-ஆவது முறையாக வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.  அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாகவும், வணிக வங்கிகளுக்கான எம்எஸ்எப் (Marginal Standing Facility) மற்றும் வங்கி விகிதம் 4.25 சதவிகிதமாகவும் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.  ரிவர்ஸ் ரெப்போ விகிதம் மட்டும் 0.40 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு, 3.75 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (MPC) கூட்டத்திற்குப் பின், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெள்ளியன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: 11-ஆவது முறையாக வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்திலும் மாற்றம் இருக்காது. வங்கிகள் வைத்துள்ள வைப்புத்தொகைக்கு ரிசர்வ் வங்கி தரும் ரிசர்வ் ரெப்போ விகிதம் மட்டும் 3.35 சதவிகிதத்தில் இருந்து 3.75 சதவிகித மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போரால் விலைவாசி 5.7 சதவிகிதமாக உயரக்கூடும். விலை வாசி உயர்வு 4.5 சதவிகிதமாக இருக்கும் என கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி கணித்திருந்த நிலையில், அந்தக் கணிப்பை விட, இந்த நிதியாண்டில் விலைவாசி 5.7 சதவிகிதமாக உயரும். இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும். 2022-23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவிகித மாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்ட நிலையில், அதுவும் திருத்தப்பட்டு, 0.6 சதவிகிதம் வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. 7.2 சதவிகித மாகவே வளர்ச்சி இருக்கும். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.