குஜராத் விபத்து - உயர்மட்ட நீதித்துறை புலன் விசாரணை நடத்துக : சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, குஜராத்தில் நடந்துள்ள தொங்குபால விபத்துக்கு யார் பொறுப்பு என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்; குஜராத் அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும் என கூறினார். அவர் மேலும் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் மோர்பி என்னு மிடத்தில் உள்ள தொங்கு பாலத்தில் ஏற்பட்ட துயரார்ந்த விபத்து காரணமாக 140க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பலர் காயம் அடைந்திருக்கிறார்கள். காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு உடனடியாக அளிக்கப்பட வேண்டும். இந்தப் பாலமானது பழுது பார்க்கப்பட்டு, பின்னர் உரிய பாதுகாப்புத் தணிக்கை எதுவுமின்றி மக்களின் பயன் பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளிவந்துள்ளன. தொங்கு பாலத்தில் அனுமதிக்கப்பட்ட அள விற்கும் அதிகமாக ஆட்கள் ஏற்றப்பட்டி ருக்கின்றனர். மேலும் மேற்படி பாலத்தைச் சரிசெய்திடும் வேலை எவ்விதமான அனுபவமுமில்லாத நிறுவனத்திடம் அளிக்கப் பட்டிருக்கிறது. இந்த விபத்துக்கு யார், யாரெல்லாம் காரணம் என்பதை அறிய உயர்மட்ட நீதித்துறை புலன்விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிபிஎம் கிளைகளுக்கு மத்தியக்குழு அழைப்பு
புதுதில்லி, நவ.2- பொருளாதாரம் மேலும் மேலும் வீழ்கிறது; மக்களின் துன்பதுயரங்கள் அதிகரிக்கின் றன; மோடி அரசின் இந்த அவலங்களை அம்பலப்படுத்தி நாடு முழுவதும் உள்ளூர் மட்டத்தில் கிளர்ச்சிப் போராட்டங்களை வலுப் படுத்துமாறு அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அக்டோபர் 29-31 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. அதன் பின்னர் அறிக்கையை வெளியிட்டு, சீத்தாராம் யெச்சூரி நிருபர்களிடையே பேசினார். அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மோடி அரசாங்கத்தின் கொள்கைகள், அதிகரித்துவரும் பொருளாதார மந்தப் போக்கு டன் ஆழமான நெருக்கடிக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. உலக வங்கி மூன்றாவது முறையாக இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை, ஆரம்பத்தில் இருந்த 8.7 விழுக்காட்டில் இருந்து 6.5 விழுக்காடாகக் குறைத்திருக்கிறது. அதேபோன்றே இந்திய ரிசர்வ் வங்கியும் இதனை 7.8 விழுக்காட்டி லிருந்து 7 விழுக்காடாகக் குறைத்திருக்கிறது. தொழில் வளர்ச்சி (industrial growth) கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவு சரிவைச் சந்தித்துள்ளது; 8 கேந்திரமான துறைகளில் (core sectors) சென்ற ஆண்டு 19.4 விழுக்காடாக இருந்தது வீழ்ந்து இந்த ஆண்டு 9.8 விழுக்காடாக மாறியிருக்கிறது. இவற்றை புள்ளியியல் அமைச்சகத்தின் அக்டோபர் 12 தேதியிட்ட வெளியிடப்பட்ட செய்தி காட்டுகிறது. ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந் திருக்கிறது. அந்நியச்செலாவணி இருப்பும், வர்த்தகப் பற்றாக்குறையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்திருக்கின்றன.
மக்கள் மீது சகிக்கமுடியாத அளவிற்கு சுமைகள்
ஆழமாகியுள்ள பொருளாதார நெருக்கடி, மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பெரிய அளவிற்குத் துன்ப துயரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. வேலையின்மை விகிதம் பண்டிகைக் காலத்திலும்கூட 7.8 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இருப்பினும், மோடி அரசாங்கம் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் உரிய நிதியை ஒதுக்கிட மறுக்கிறது. சுமார் 1.5 கோடி விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 1க்கும் அக்டோபர் 21க்கும் இடையே வேலை அளிக்கவும் மறுத்திருக்கிறது. 2022 நிதி யாண்டில் 1.73 கோடி பேர் வேலை மறுக்கப் பட்டிருக்கிறார்கள். 2021 நிதியாண்டில் 2.1 கோடி பேர் வேலை மறுக்கப்பட்டிருக்கிறார்கள். வறுமை வளர்ந்துகொண்டிருக்கிறது. உலக பசி-பட்டினி அட்டவணையில் இந்தியா 107/121ஆவது நாடாக சரிந்து, நிலைமை மிக மோசமாக இருப்பதைக் காட்டியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்த உயர்மட்ட அளவான 6 விழுக்காட்டையும் மீறி நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் அதிகரித்திருக்கிறது. உண வுப் பணவீக்கம் மிக உச்சத்திற்குச் சென்றிருக் கிறது. உயிர்வாழ்வதற்கு அடிப்படை உணவுப்பொருள்களாகக் கருதப்படும் பருப்பு/கோதுமை/அரிசி போன்றவை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளன. மத்தியக் கிடங்குகளில் உணவு தானியங்களின் இருப்புகள் ஐந்தாண்டுகளில் மிகவும் குறைவான அளவிற்குச் சென்றுள்ளது. உணவுப் பற்றாக்குறை ஆபத்துகள் மலைபோல் வளர்ந்துகொண்டிருக்கிறது.
விசிறிவிடப்படும் மதவெறித் தீ
மக்களின் துன்ப துயரங்களைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், மோடி, மக்கள் மத்தியில் மத வெறித் தீயை விசிறி விடக்கூடிய விதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். பத்ரிநாத் மற்றும் அயோத்தி யில் மோடி மதம் சார்ந்த விழாக்களில் பங்கேற்றதை ஊடகங்கள் திரும்பத்திரும்பக் காட்டிக்கொண்டிருக்கின்றன. ஏதாவது காரணத்தைக் கூறி, முஸ்லீம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். முஸ்லீம்கள் தாக்கப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விஷத்தைக் கக்கும் வெறுப்புப் பேச்சுகளும் வன்முறை வெறி யாட்டங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின் றன. குஜராத் மாநிலத்தில் கேடா என்னு மிடத்தில் முஸ்லீம் இளைஞர் ஒருவர், சீருடை அணியாத காவல்துறையினரால் கசை யடிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மதவெறித் தீயை விசிறிவிடும் இத்தகைய செயல்களுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் விரிவான முறையில் அணிதிரள வேண்டும் என மத்தியக்குழு அழைப்பு விடுக்கிறது.
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் கலைக்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனினும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் வாழ்வாதாரங்கள் மீதும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. ஜம்மு-காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து இதர மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஒரு கலந்தா லோசனை நடைமுறையை ஆரம்பித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர இடது சாரிக் கட்சிகளுடன் முயற்சிகளை எடுத்திடும்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள்
தேர்தல் ஆணையமானது இமாசலப் பிரதேசத்திற்கும், குஜராத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிப்பதற்கு மாறாக, இமாச்ச லுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. இதனால் குஜராத்தில் தேர்தலுக்கு நடத்தை விதியை அமல்படுத்துவதற்கு முன்பு அனுகூலமான அவகாசத்தை பாஜக பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மோடி, நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி, மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறார். ஒன்றிய அரசின் கஜானாவிலிருந்து குஜராத் மாநில மக்களுக்கு பல புதிய திட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார். “தனிப்பட்ட சொந்த தீபாவளி இனாம்கள்” (“personal Diwali gifts”) என்று இவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும் குஜராத் பாஜக அரசாங்கம் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (uniform civil code) கொண்டுவரஇருப்பதாகவும் அறிவித்திருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. ஓரிடத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவினைத் தெரி வித்திருக்கிறது. இதர இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜக வேட்பாளர்களைத் தோற்கடித்திட அறைகூவல் விடுத்திருக்கிறது. குஜராத்தில் தேர்தல் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. பாஜக தோற்கடிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதர மதச்சார்பற்ற கட்சிகளு டன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது.
பிரேசிலில் இடதுசாரிகள் வெற்றி
பிரேசில் ஜனாதிபதியாக லூலா வெற்றி பெற்றிருப்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு வாழ்த்துகிறது. பாசிச வலது சாரியான ஜெயிர் போல்சானாரோவின் தோல்வி லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி சக்திகள் மேலும் முன்னேறிக்கொண்டிருப்பதன் அடை யாளமாகும். சோசலிச கியூபாவிற்கு அடுத்து, சிலி, பொலிவியா, கொலம்பியா, பெரு, ஹோண்டுராஸ் முதலானவற்றில் இடதுசாரி ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசியல் தலைமைக்குழுவிற்கு எம்.வி.கோவிந்தன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தனை அரசியல் தலைமைக்குழுவிற்கு மத்தியக்குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.
மத்தியக்குழு அறைகூவல்
மக்களின் துன்ப துயரங்களை முன் வைத்து 2023 ஏப்ரலில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியுடன் நிறைவடையக்கூடிய விதத்தில் 14 அம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களால் நாடு முழுதும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ள கிளர்ச்சிப் போராட்ட நடவடிக்கைகளுக்கு, கட்சியின் மத்தியக்குழு தன் ஆதரவினை தெரிவிக்கிறது. மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான சுமைகள் அதிகரித்திருப்பதற்கு எதிராகவும், தலித்துகள், பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கு எதிராகவும் உள்ளூர்மட்டத்தில் கிளர்ச்சிப் போராட்டங்களை வலுப்படுத்துமாறு, தனது கிளைகளுக்கு மத்தியக்குழு அறை கூவல் விடுக்கிறது. இந்தப் போராட்டங்களின்போது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைகள் உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும், அவை முறையாக அமல்படுத்தப்பட வேண்டும், ஊதியங்கள் காலத்தே அளிக்கப்பட வேண்டும், தேவைக் கேற்ப வேலைகள் அளிக்கப்பட வேண்டும் என்பனவற்றையும் முன்னிறுத்திட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.