states

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு

புதுதில்லி, நவ. 9 - நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கீழமை நீதி மன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.  இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா  ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தர வைப் பிறப்பித்துள்ளது. “நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கு களை விரைந்து தீர்ப்பது தொடர்பாக, விசார ணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதலை உருவாக்குவது கடினம்” என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், இந்த  விவகாரத்தை மாநில உயர் நீதிமன்றங்களிடமே விட்டுவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளைத் திறம்படக் கண்காணித்துத் தீர்ப்பதற்கு தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யுமாறும் உயர் நீதிமன்றங்களை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகத் தடை விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளின் நிலவரத்தை அறிய உயர் நீதிமன்ற இணையதளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குற்ற வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றால் தற்போது தேர்தலில் போட்டியிட ஆறு ஆண்டுகள் தடையுள்ள நிலையில், அதனை ஆயுட் காலம் முழுவதும் நீட்டிக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.