புதுதில்லி, மார்ச் 25 - எரிபொருட்களின் விலைகளை கடுமையாக உயர்த்தி, ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கையோடு, நரேந்திர மோடி அரசு விளையாடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 137 நாட்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல், புதன்கிழமையன்று 2-வது நாளாகவும் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா 80 காசுகள் மோடி அரசு உயர்த்தியது. இந்த விலை உயர்வு, வெள்ளிக்கிழமையன்று தொடர்ந்தது. இதன்மூலமாக கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 2 ரூபாய் 40 காசுகள் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுதவிர எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை, நடுத்தரக் குடும்பங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ள நிலையில், எரிபொருள் விலை உயர்வுக்கு, காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
“அவர்கள் (ஒன்றிய அரசு) விலையை 80 காசுகள் உயர்த்துகிறார்கள், சில சமயங்களில் ரூ. 1 உயர்த்துகிறார்கள். அவர்கள் விலையை அதிகரிக்க விரும்பினால், அதை ஒரே நேரத்தில் அதிகரிக்கலாம். அது ரூ. 10, ரூ. 15 அல்லது ரூ. 20 ஆக கூட இருக்கட்டும். மாறாக, இப்படி ஒவ்வொரு நாளும் விலைவாசியை உயர்த்தி மக்களை சிரமப்படுத்துவது சரியல்ல. சாமானியர்களின் வாழ்க்கையோடு அவர்கள் விளையாடுகிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத், செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “உண்மையான பிரச்சனை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரோ அல்லது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படமோ அல்லது ஹிஜாப்போ அல்ல. பணவீக்கம் மற்றும் வேலையின்மைதான் உண்மையான பிரச்சனை. எரிபொருட்கள் விலைகள் அதிகரித்து வருகின்றன. தற்போது தேர்தல் முடிந்து, பணவீக்கம் திரும்பியுள்ளது. இது பாஜக-வின் விளையாட்டு” என்று சாடியுள்ளார்.