states

img

அமெரிக்க ஆப்பிளுக்கு மோடியின் பரிசு

ஆப்பிளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று காஷ்மீர் விவசாயிகள் கதறிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க ஆப்பிளுக்கு கூடுதல் வரியை ஒன்றிய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிளுக்கு 50 சதவீத வரியும், வால்நட்டுக்கு 100 சதவீத வரியும், பாதாம் பருப்பு மீது கிலோவுக்கு 100 ரூபாயும் ஒன்றிய  அரசு வரி விதித்து வருகிறது. கடந்த 2019இல் குறிப்பிட்ட இந்திய உருக்கு மற்றும் அலுமினியம் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா உயர்த்திய நிலையில், இதற்கு பதிலடி என்ற பெயரில் அமெரிக்க ஆப்பிள், வால்நட்டுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட வரியுடன் கூடுதலாக 20 சதவீத வரியும், பாதாம் பருப்புக்கு கூடுதலாக கிலோவுக்கு 20 ரூபாயும் ஒன்றிய அரசுவிதித்தது. இந்நிலையில், 2019இல் விதிக்கப்பட்டு வரும் கூடுதல் இறக்குமதி வரியை ஒன்றிய வர்த்தக அமைச்சகம் திடீரென வாபஸ் பெற்ற நிலையில், இந்திய உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரிஉயர்வை குறைக்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. தொடர்ந்து ஆப்பிள், வால்நட், பாதாம் உள்பட 8 அமெரிக்க பொருட்களுக்கும் கூடுதல் வரி  வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த முடிவால் உள்நாட்டு ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்கு எந்த  பாதிப்பும் ஏற்படாது என ஒன்றிய அரசு மழுப்பி யுள்ளது.

 இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், ஜம்மு-காஷ்மீரின் குல்ஹாம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வுமான முகமது யூசுப் தாரிகாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “வாஷிங்டன் ஆப்பிள் மீதான இறக்குமதி வரியை  35% லிருந்து 15% ஆக குறைத்தது அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அளித்த  ஜி-20 பரிசாக உள்ளது.  அமெரிக்காவில் பெருநிறுவனங்கள் ஆப்பிள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க அரசு அவர்களுக்கு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு அதிக மானியம் அளிக்கிறது. இதற்கு நேர்மாறாக நமது நாட்டின் ஆப்பிள் விவசாயிகள் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக இடுபொருள் செலவைக் கூட ஆப்பிள் விவசாயிகளால் திரும்பப் பெற முடியவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில், ஆப்பிள் இறக்குமதி வரியை குறைப்பது அவர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும்” என விமர்சித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்டோரும் ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.