புதுதில்லி, மார்ச் 16- தேசிய ஒருங்கிணைப்புக் கவுன் சில் கூட்டுவதற்கு முறையான கால இடைவெளி எதுவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்து ள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டு நாளது தேதி யில் இயங்கிக் கொண்டுள்ளதா என்றும், ஆம் எனில், அதன் விபரங்கள், நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் என்னென்ன என்றும், நடத்தப்பட்ட தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் விபரங்கள், தேசிய முக்கி யத்துவம் வாய்ந்தவைகளாக அதில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்சனைகள் மற்றும் அதன் அமைப்புகள் என்னென்ன என்றும், கேட்டிருந்தார்.
இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்கள் வருமாறு: வகுப்புவாதம், சாதிப்பிரிவினை, பிராந்தி யவாதம் முதலானவைகளை எதிர்த்துப் போரிட 1961இல் நடத்தப்பட்ட தேசிய ஒருங்கி ணைப்பு மாநாட்டினைப் பின் தொடர்ந்து, தேசிய ஒருங்கி ணைப்புக் கவுன்சில் உருவாக்கப் பட்டது. தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் என்பது, தேசிய ஒருங்கிணைப்பு சம்பந்தமான அனைத்து விவகாரங்களை விமர் சிக்கவும், அதன்மீது பரிந்துரைகள் செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு நிலையான அமைப்பு. தேசிய ஒருங்கி ணைப்பு கவுன்சில் பிரதமரைத் தலைவராக கொண்டு, ஒன்றிய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்கட்சித் தலைவர்கள், அனைத்து மாநில/யூனியன் பிரதேச முதல்வர்கள் மற்றும் சட்டமன்ற உறுப் பினர்கள், தேசிய அரசியல் கட்சியின் தலை வர்கள், தேசிய ஆணையங்களின் தலை வர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தக பிரதிநிதிகள், தொழிலாளர் பிரதிநிதிகள், புகழ் பெற்றவர்கள், மற்றும் மகளிர் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டது. இது துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 16 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவ்வப் பொழுது தேவைக்கேற்ப கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டங்களை நடத்த முறையான அல்லது குறிப்பிட்ட கால இடைவெளி ஒன்றுமில்லை. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார். (ந.நி.)