புதுதில்லி,மார்ச் 19- ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலமாக கனிம வளங்களை எதிர்காலத்தில் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆழ்கடல் ஆராய்ச்சி குறித்து ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிசந்திரன் கூறியதாவது: உயிரினங்களின் தோற்றம் குறித்து பல்வேறு மர்மங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.கடலில் 4 கிலோமீட்டர் முதல் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்துதான் உயிரி னங்கள் தோன்றியதாக சில ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன. 4 முதல் 5 கிலோமீட்டர் வரை ஆழத்தில் முழுவதும் இருட்டாக இருக்கும். ஆனால், அங்கும் உயிரினங்கள் வாழ்கின்றன. அத்தனை அடி ஆழத்தில் உயிரினங்கள் எப்படி பிறக்கின்றன. அவை எவ்வாறு வாழ்கின்றன போன்றவை குறித்து ஆழ் கடல் ஆய்வின் மூலம் தெரியவரும். ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக ரூ.4,077 கோடி செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கடலின் 500 மீட்டர் ஆழத்துக்கு இந்திய விஞ்ஞானிகள் சென்று ஆய்வில் ஈடுபடு வார்கள். ஆழ்கடலில், 6,000 மீட்டர் ஆழம் வரை உள்ள பகுதிகளில், உயிரினம் அல்லாத பாலி மெட்டாலிக் மாங்கனீஸ் கோபால்ட் போன்ற பல தாது வளங்கள் உள்ளன. இந்த ஆராய்ச்சியின் மூல மாக கனிம வளங்களை எதிர்காலத்தில் வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகலாம். இதன் மூலம், ஆழ்கடல் வளங்கள் ஆராயப்பட்டு நிலையான பயன்பாட்டுக்கான ஆழ்கடல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும். ஆழ் கடல் ஆராய்ச்சிக்கான தொழில்நுட்பங்கள் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்தவை. வர்த்தக ரீதியாக எளிதில் கிடைக்காது. முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலை களுடன் இணைந்து இதற்கான புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்படும். கடலுக்கு அடியில் பயன்படுத்துவதற்கு தொலைபேசிகள், ஆராய்ச்சி கலன்கள் ஆகியவை இதில் அடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.