states

இந்துத்துவா-கார்ப்பரேட் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக புதிய உத்திகளை வகுப்போம்

புதுதில்லி, மார்ச் 10 - வலதுசாரி அரசியல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதையே 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்றும், இந்துத்துவா - கார்ப்பரேட் ராஜ்ஜியத்திற்கு எதிராக போராடும் முயற்சிகளை இரு மடங்காக அதிகரித்திட இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் புதிய உத்திகளை வகுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேச தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. மதரீதியான அணிதிரட்டலை தீவிரமாக மேற்கொண்டது,

ஊடகங்களின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது மற்றும் மிகப்பெரும் அளவிலான பணபலம் ஆகியவற்றின் உதவியோடு, குறைவான பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மக்கள் மிகக் கடுமையான பொருளாதார துயரங்களை அனுபவித்த போதிலும், இலவச உணவு தானியங்கள் உள்ளிட்ட சில நிவாரண நடவடிக்கைகள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.  

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது. பஞ்சாப் மக்கள் இரண்டு பாரம்பரிய கட்சிகளான காங்கிரசையும், அகாலிதளத்தையும் நிராகரித்து ஒரு தீர்மானகரமான மாற்றத்திற்கான வாக்களித்திருக்கிறார்கள்.  ஒட்டுமொத்தத்தில் இந்த முடிவுகள், வலதுசாரி அரசியலின் ஆதிக்கம் தொடர்வதையே சுட்டிக்காட்டுகின்றன. இந்துத்துவா - கார்ப்பரேட் ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் அதன் கொள்கைகள் மற்றும் வளர்ந்து வரும் எதேச்சதிகாரத்திற்கு எதிராகவும் நடைபெறும் போராட்டத்தில் தங்களது முயற்சிகளை இருமடங்காக்குவதற்கு  இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் புதிய உத்திகளை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.