மும்பை, ஏப்.11- மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை யொட்டி, பல்வேறு கட்சி அரசியல் தலை வர்களும் பிரச்சாரத்திற்காக கோலாப்பூர் பகுதியில் முகாமிட்டுள்ளனர். இந்தத் தேர்தலில் ஆளும் ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி சார்பில் காங்கிர சைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ஜாதவ் வேட்பாள ராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, சிவ சேனா தலைவரும், மாநில முதல்வரு மான உத்தவ் தாக்கரே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக-வை அவர் கடுமையாகச் சாடினார்.
“சிவசேனா எப்போதும் இந்துத்துவ கொள்கையில் உறுதியாக இருந்து வந்துள்ளது. பாரதிய ஜன் சங்கம் மற்றும் ஜனசங்கம் என வெவ்வேறு பெயர்களை வைத்துக் கொண்டு வெவ்வேறு சித் தாந்தங்களைப் பிரச்சாரம் செய்யும் பாஜக வைப் போல சிவசேனா இல்லை” என்று விமர்சித்த அவர், “இந்துத்துவா கொள்கை களுக்கான ‘காப்புரிமை’ பாஜகவிடம் மட்டும் இல்லை” என்று குறிப்பிட்டார். “ராமர் மட்டும் பிறக்காமல் இருந்திருந் தால், பாஜக எந்த பிரச்சனையை முன்னி றுத்தி அரசியல் செய்திருக்கும் என்பது எனக்கு இன்னும் கூட புரியவில்லை” என்று கூறிய அவர், “பாஜகவால் எந்த பிரச்சனையையும் எழுப்பி, அதற்கான தீர்வைத் தர முடியாது. இதன் காரணமா கவே அவர்கள் எப்போதும் மதம் மற்றும் வெறுப்புப் பிரச்சாரத்தை கையில் எடுக்கின்றனர்” என்றும் சாடினார். “மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மிகப் பெரிய பாவத்தை நாங்கள் (சிவசேனா) செய்துள்ளதாக பாஜக கூறுகிறது.
ஆனால் பாஜக, மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைத்தது புனிதமான செயலா?” என்று கேட்ட அவர், “பாஜக-வைப் போல நாங்கள் ஒருபோதும் யாரையும் முதுகில் குத்துவதில்லை. பாஜக எங்களை விடச் சிறப்பாகச் செயல்படுகிறது என்றால், அது பொய்களைக் கூறுவதில் மட்டும்தான்” என்றார். ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கைகளையும் விமர்சித்த உத்தவ் தாக்கரே, “எரிபொருள் விலையை ஒன்றிய அரசுதான் உயர்த்துகிறது. ஆனால், விலையைக் குறைக்கும் பொறுப்பை மாநில அரசுகள் மீது போடுகிறது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையைக் கூட உரிய காலத்தில் மாநிலத்திற்கு வழங்குவதில்லை. பிரதமர் மோடி ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதாக பட்னாவிஸ் கூறுகிறார். அது உண்மை தான்.. ஆனால் அதை எப்படி பச்சையாகவா சாப்பிட முடியும்? உணவைக் கொடுத்துவிட்டு எரிபொருள் விலையை உயர்த்தினால் எப்படி?” என்று கேள்வி எழுப்பினார்.