states

img

அரசியலமைப்புச் சட்டத்தை, முதலில் மோகன் பகவத் படிக்கட்டும்!

புதுதில்லி, பிப்.8- சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற ‘தரம் சன்சத்’ மாநாட்டில், “இந்தியாவை இந்து நாடாக்க, முஸ்லிம்களை படுகொலை செய்வோம். அதற்காக உயிரையும் கொடுப்போம்” என்று சாமியார்கள் கொலைவெறியைத் தூண்டினர். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் “தரம் சன்சத் மாநாட்டு நிகழ்வுகள் இந்து சித்தாந்தத்தை பிரதிநிதித்துவம் செய்யவில்லை” என்று தெரிவித்தார். “தனிப்பட்ட ஆதாயங்கள் அல்லது பகையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட அறிக்கைகள் இந்துத்துவாவை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்று கூறினார்.

“இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரதிபலிப்பே ‘இந்துத்துவா’ என்றும்; ஆனால், அரசியலமைப்புக்கு முன்னரே நாட்டில் இந்துத்துவா இருந்தது” என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், இந்துத்துவா குறித்த மோகன் பகவத்தின் உபதேசத்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். “ஆர்எஸ்எஸ் தலைவர் முதலில் அரசியலமைப்பு சட்டத்தை படித்து விட்டு, அதைப் பற்றி தன்னை பின்பற்றுபவர்களுக்கு அவர் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தலைவர் இப்போது கூறியதை நீண்ட காலத்துக்கு முன்பே சொல்லியிருக்க வேண்டும். முதலில், கொலை, மிரட்டல் மற்றும் வன்முறையை பரப்பக் கற்றுக்கொடுத்து விடுவது, பின்னர் ‘தரம் சன்சத்’ உரையை எதிர்ப்பது போல மறுப்பது; இதுவே ஆர்எஸ்எஸ் வேலையாக உள்ளது” என்றும் சாடியுள்ளார்.