சண்டிகர், ஜன.7- பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் போராட்டம் காரணமாக, தனது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பினார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, பஞ்சாப் காங்கிரஸ் அரசு பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில அரசிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர்களால் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
“பிரதமரின் பாதுகாப்பில் பஞ்சாப் அரசு எந்த குறையும் வைக்கவில்லை. பிரதமர் முதலில் ஹெலிகாப்டரில் செல்வதற்குத்தான் திட்டமிட்டிருந்தார். ஆனால் எங்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் பயணம், சாலை மார்க்கத்தை தேர்ந்தெடுத்து விட்டார். அவர் பயணத்தை ரத்து செய்யும் சூழல் ஏற்பட்டதற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்தும் பாஜக-வினர் அதனை ஏற்பதாக இல்லை. நடந்த சம்பவம் திட்டமிட்ட ஒன்று என பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். பதிலுக்கு, “பெரோஸ்பூரில் பிரதமரின் பேச்சைக் கேட்க 700 பேர் கூட வராததாலேயே அவர் திரும்பிச் சென்றுவிட்டார்;
பழியை மாநில அரசு மீது போடுகிறார்” என்று காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமரின் வழியை மறித்து போராட்டம் நடத்தியதாக கூறப்படும் பாரதிய கிசான் யூனியனின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுர்ஜித் சிங் பூல், ஏஎன்ஐ நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பிரதமரை வழிமறிக்க வேண்டும் என்பதெல்லாம் எங்களின் எண்ணம் இல்லை. பஞ்சாப் காவல்துறை எங்களை அங்கிருந்து நகரும்படி சொல்லும் வரை, பிரதமர் அந்த வழியாகச் செல்வார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது” என்று தெரிவித்துள்ளார். “பிரதமர் மோடி கார் மூலம் அந்த வழியில் வருவார் என எங்களுக்கு உண்மையாகவே தெரியாது. நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மேம்பாலத்தில் பிரதமரின் வாகனம் நிற்பதாகக் கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
உண்மையாகவே பிரதமரின் வாகனத்தை நிறுத்தும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. பிரதமர் வருவதால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மதியம் 1 மணி வரை காவல்துறையினர் எங்களிடம் வலியுறுத்தினர். இதை எங்களால் நம்ப முடியவில்லை. காவல்துறை எங்களிடம் பொய் கூறுவதாகவே நாங்கள் நினைத்தோம். ஏனென்றால் வழக்கமாக, பிரதமர் வாகனம் செல்லும் இடங்கள் குறைந்தபட்சம் 2-3 மணி நேரத்திற்கு முன்பே பாதுகாப்பு வளையத்தில் எடுத்து கொள்ளப்பட்டு விடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.