states

img

சவப்பெட்டி வைக்கும் இடத்தில் 8 முதல் 10 பேர் வரை உட்காரலாம்..!

கர்நாடக பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

பெங்களூரு, மார்ச் 4 - உக்ரைனில் நடந்த குண்டுவீச்சில், கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா ஞானகவுடா பலியான சம்பவம் இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  நவீனின் பெற்றோரும், உறவினர் களும், இறந்த தங்கள் மகனின் உடலையா வது பார்த்து விட மாட்டோமா? என்று கண்ணீ ரும் வேதனையுமாக காத்துக் கொண்டிருக் கின்றனர். அவரது உடலை 2 நாட்களுக்குள் இந்தியாவுக்கு கொண்டு வருவதாக மோடி அரசும், நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடாவிடம் உறுதியளித்திருந்தது. இந்நிலையில், “நவீன் உடலைக் கொண்டுவருவது சாத்தியமில்லை” என்றும், “அவரது சவப்பெட்டியை கொண்டு வந்தால், அது விமானத்தில் 8 பேருக்கான இடத்தை அடைத்துக் கொள்ளும்” என்றும் பேசி கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லாட் சர்ச்சையைக் கிளப்பி யுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி - தர்வாட் தொகுதி எம்எல்ஏ-வான அரவிந்த் பெல்லாட், இதுதொடர்பாக பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். அதில், “நவீனின் சடலத்தை  மீட்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் ஒரு போர்க்களம். இது  அனைவருக்கும் தெரியும். முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, முடிந்தால், உடல் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “உயிருடன் இருப்பவர்களை மீட்டெடுப்பதே மிகவும் சவாலானது. இறந்தவர்களை மீட்டெடுப்பது இன்னும் கடினமானது. ஏனெனில் ஒரு இறந்த உடல் விமானத்தில் அதிக இடத்தை அடை த்துக் கொள்ளும். சவப்பெட்டி வைக்கும் இடத்தில் எட்டு முதல் 10 பேர் வரை தங்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அவரின் இந்த பேட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மகனை இழந்த பெற்றோரின் மனநிலையை கணக்கில் கொள்ளாமலும், பொறுப்பற்ற வகை யிலும் பெல்லாட் பேசியுள்ளார் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.