ஐ.நா., பிப்.26- மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது என, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானம் மீது இந்தியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பைக் கண்டிக்கும் வரைவு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தது ரஷ்யா. பாதுகாப்புக் கவுன்சிலில் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்குப் பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் கண்டனத் தீர்மானத்துக்கு ஆதரவாக 11 உறுப்பு நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகியவை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தன. ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசுகையில், “உக்ரைனில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. வன்முறையை விடுத்து வெறுப்பைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள் என வேண்டுகிறோம். மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்களை மீட்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி. இந்த காரணங்களுக்காக இந்தியா இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்க்கிறது” என தெரிவித்தார்.