புதுதில்லி, ஜூன் 2- நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, 2022 மே 30-ஆம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி, “மோடியின் சாதனைகளைக் கூறுவதற்கு ஒரு யுகம் போதாது” என்றும், “உலகிற்கே தலைமை தாங்கும் அளவிற்கு இந்தியாவை மோடி வல்லரசாக்கி விட்டார்” என்றும் பாஜகவினர் சமூகவலைதளங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகவும், குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்கம், இப்போதுவரை மீளமுடியாத பொருளாதார பாதிப்பில் இந்தியாவை தள்ளியிருப்பதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.
பொருளாதாரப் பேராசிரியரான தீபன்சு மோகன், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியையும், நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக-வின் 8 ஆண்டுகால ஆட்சியை யும் ஒப்பிட்டு விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மோடி ஆட்சியில் வேலையின்மை, விலைவாசி உயர்வு, ஜிடிபி சரிவு அனைத்து வகையிலும் இந்தியப் பொருளாதாரம் மோச மடைந்து விட்டதற்கான புள்ளிவிவரங்களை அடுக்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்ப தாவது: “ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்பாடு 2009 முதல் 2014 வரையிலான அதன் இரண்டாவது பதவிக் காலத்தை விட, 2004 முதல் 2009 வரையிலான (இடதுசாரிகளின் ஆதரவுடன் நடைபெற்ற) முதல் ஆட்சிக் காலத்தில் சிறப்பாக இருந்தது. உலக வங்கித் தரவுகளின் அடிப்படையில், 2004 முதல் 2014 வரையிலான காலத்தில்- உலக ளாவிய பெரும் மந்தநிலை ஏற்பட்ட 2007-08 ஆண்டைத் தவிர, ஏனைய அனைத்து ஆண்டுகளி லும் இந்தியாவின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் சராசரியாக 7.5 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரை இருந்தது.
இந்தப் போக்கு மோடி ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டிற்கும் பின்னரும் தொடர்ந்தது. 2016 வரை ஏறுமுகத்திலேயே நடைபோட்டது. ஆனால், 2016-இல் நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்திற்குப் பின், வளர்ச்சி குறையத் தொடங்கியது. 2016 நவம்பர் 8 அன்று ஒரே இரவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது, வளர்ச்சி சுழற்சியை கடுமை யாகப் பாதித்தது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் களை நசுக்கி, பொருளாதார வளர்ச்சியையும் சரிவில் தள்ளி விட்டது. இது, கொரோனா பொது முடக்கம் காலத்தில் 2020 - 21-இல் மைனஸ் என்ற எதிர்மறை வளர்ச்சி விகிதத்திற்கு போய் விட்டது. 2004-இல் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தோர் 54 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தனர். ஆனால், 2020-இல் அந்த எண்ணிக்கை 43 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் உலகளாவிய வேலைவாய்ப்பு விகிதம் 55 சதவிகிதம் ஆகும். இதனை 2004-ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே இந்தியா நெருங்கி யிருந்தது. தற்போதோ 43 சதவிகிதமாக பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், அண்டை நாடான வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 53 சதவிகிதமாகவும், சீனாவில் 63 சதவிகிதமாக வும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை யுறுதிச் சட்டம், இந்தியாவின் கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குகிறது. ஆனால், மோடி அரசாங்கமானது, கிராமப்புற உத்தரவாதத் திட்டத்திற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு களை காலப்போக்கில் குறைந்தது. இதனால் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு போது மான வேலைகள் கிடைப்பது தடுக்கப்பட்டது. வேலையின்மைக்கு இதுவும் முக்கியக் காரணம் ஆகும். அதிலும் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், வேலையின்மையானது, கிராமப்புற மக்களை மிக மோசமான முறையில் பாதித்தது. மன்மோகன் சிங்-கின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், குறிப்பாக 2009-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட காலத்தில், பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது. இது மோடி அரசின் முதல் சில ஆண்டுகளில் கட்டுக்குள் வந்தது. அதற்குக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததே ஆகும். பணவீக்கம் கட்டுக்குள் இருக்க இது உதவியாக இருந்தது. ஆனால், அதன்பிறகு, கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதும் மோடி ஆட்சியில் பணவீக்கம் அதிகரித்து விட்டது. கொரோனா பேரிடர், உக்ரைன் - ரஷ்யா போர் தற்போது அதனை மேலும் கடுமையாக அதிகரிக்கச் செய்து விட்டது. ஜிஎஸ்டி வரி உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வும் பணவீக்க அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தின் கடன் வாங்கும் அளவு, ஜிடிபி-யில் 72 சதவிகி தம் முதல் 73 சதவிகிதத்திற்கு கீழே வைக்கப் பட்டது. அதன் இரண்டாவது ஆட்சியின் போதும் இது மிக குறைவாக இருந்தது. 2014-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி நிறைவடை யும் போது, ஒன்றிய அரசின் கடன் தொகை 55 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின் 8 ஆண்டுகளில், குறிப்பாக 2016-ஆம் ஆண்டிற்குப் பின் படிப்படியாக உயர்ந்து, 2022-ஆம் ஆண்டில் நாட்டின் கடன் மதிப்பு 135 லட்சம் கோடி ரூபாயாக பெருகி விட்டது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து உயர்ந்து, 2021 - 22 நிதி யாண்டில் ஜிடிபி-யில் 6.9 சதவிகிதமாக அதி கரித்துவிட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை யானது, பந்தயக் காரின் டயர்களை துப்பாக்கி யால் சுட்டது போல, பொருளாதாரத்தின் அடிப்படைகளை சிதைத்து விட்டது.
2016-க்குப் பிந்தைய காலகட்டத்தில், அனைத்து வகையிலும் இந்திய பொருளா தாரம் மோசமடைந்து உள்ளது. மோடி அர சாங்கம் தற்போது மூன்று குறிப்பிடத்தக்க நடுத்தர முதல் நீண்ட கால சவால்களை எதிர்கொள் கிறது: வருமான ஏற்றத்தாழ்வுகள், சிதைந்த தொழிலாளர் சந்தைகள் மற்றும் வேலை யின்மை ஆகிய பிரச்சனைகளே அவை. மேலும், ஒன்றிய அரசுக்கும் மாநிலங் களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு, தற்போது அது மிக மோசமாக உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான துருவ முனைப்பு மற்றும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டும் ஆளும் கட்சியின் அரசியல், சமூக நம்பிக்கையை சிதைத்துள்ளது. இது சிறந்த பொருளாதார செயல்திறனை நிலைநிறுத்துவதில் நீண்டகால நம்பிக்கையை உருவாக்குவதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் வேலையின்மை நெருக்கடி, மோசமான வேலை ஒப்பந்தங்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேராசிரியர் தீபன்ஷூ மோகன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.