புதுதில்லி, ஜூலை 28 - பாஜக தூண்டிவிட்ட இனக்கலவரத்தால் பாதிக்கப் பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு, ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்றக் குழு, புதனன்று பயணம் செல்கிறது. இங்கு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குழு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள பழங்குடியின மக்களையும், அவர்களது பிரதிநிதிகளையும் சந்தித்து மாநிலத்தின் தற்போதைய நிலைகுறித்து கேட்டறிய உள்ளனர். மேலும், மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை-யும், இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர். அண்மைக்காலமாக நடந்த இனவெறித் தாக்குதல் களில் பாதிப்படைந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவே இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில், 26 கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மணிப்பூர் செல்லும் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் 18 கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் குழு மணிப்பூர் பள்ளத்தாக்கு, மலைப்பகுதிகள், நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.