ஹரியானா மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இந்து மதவெறி அமைப்புகள், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கட்சியின் ஹர்யானா மாநிலக்குழு சார்பில் அதன் செயலாளர் சுரேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மூன்று நாட்களாக இந்து மதவெறி அமைப்புகள் அம்பாலா, குருசேத்திரா, பானிபட், குருகிராமில் பட்டௌடி ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், கிறித்தவர்களின் வீடுகள் ஆகியவை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட கயவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி கோருகிறது.
மாநில அரசின் உதவியுடன் ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் அமைப்புகள் தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் பிரார்த்தனைகளும், தொழுகைகளும் நடைபெறும் சமயங்களில் மதவெறிப் பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்று குறிவைத்துத் தங்கள் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. குருகிராமில், மசூதிகள் இல்லாத காரணத்தால், முஸ்லீம்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் தொழுகைகள் (நமாஸ்) புரிந்து வந்தார்கள். இவர்களை இந்துத்துவா வெறியர்கள் குறி வைத்துத் தாக்கினார்கள். இவ்வாறு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹரியானா முதலமைச்சர் மறுத்துவிட்டார். திறந்த வெளி அரங்குகளில் முஸ்லீம்கள் நமாஸ் செய்வதற்கு அளித்த அனுமதியையும் ரத்து செய்துவிட்டார்.
டிசம்பர 24 அன்று மதவெறி அமைப்புகள் குருகிராமில் பட்டௌடியில் ஒரு பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக அடித்துள்ளார்கள். ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டுள்ளாரகள்.
அம்பாலா மாவட்டத்தில் டிசம்பர் 25 அன்று 1848இல் கட்டப்பட்ட புனித ரெடீமர் தேவாலயத்தை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். அங்கிருந்த இயேசு கிறிஸ்துவின் படத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். டிசம்பர் 10 அன்று இதேபோன்று ரோஹ்டக்கிலும் தேவாலயத்திற்குள் நுழைந்து கலகம் செய்துள்ளனர். இவை அனைத்தும் ஆளும் பாஜக-வின் ஆதரவுடனே நடைபெற்றுள்ளது என்பது தெளிவு. இந்நிகழ்வுகள் காரணமாக சிறுபான்மையினர் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகிறது. அரசமைப்புச்சட்டம் நாட்டு மக்கள் அனைவருக்கும் தாங்கள் விரும்பும் தெய்வத்தைக் கும்பிடும் உரிமையை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த சம்பவங்களுக்கு எதிராக அனைத்துத்தரப்பினரும் உரத்துக் குரல்கொடுக்க வேண்டும் என்றும் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.