“இப்படியொரு ரோடு ஷோ பார்த்தது இல்ல..” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தார் நண்பர். “எங்கே...தி நகர் பாண்டி பஜார் போயிருந்தீங்களா?” என்றேன். இல்லை என்று தலையாட்டினார். “பின்ன... இதுக்கு முன்ன கோயம்புத்தூர்ல நடந்தது....இல்ல, வேற மாநிலத்துல எங்கேயாவது....” நான் முடிக்குமுன், எரிந்து விழுந்தார் நண்பர்: “இல்ல.... இல்ல...இல்ல” மனிதருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டேன். மேற்கொண்டு எதையாவது சொல்லப்போய் இந்தத் தேர்தல் காலத்தில், அதுவும் வறுத்தெடுக்கும் வெயில் நேரத்தில் அவர் இன்னும் சூடாகிக் கொதித்து என்னையும் சேர்த்து எரித்துவிடப் போகிறார் என்ற கவலையோடு சும்மா பார்த்துக் கொண்டிருந்தேன். “ஆயிரம், ஐநூறு நோட்டு செல்லாதுன்னு 2016ல திடுதிப்புன்னு நவம்பர் 8ம் தேதி ராத்திரி எட்டு மணிக்கு அறிவிச்சாரே புண்ணியவான் .... கையில இருக்கற நோட்டை எல்லாம் எப்படியாவது மாத்தணும்னு நாள் கணக்கா ஜனங்க எத்தனை ஊர்கள்ல சாலை சாலையா சாரி சாரியா வெயில்ல நிக்கறதும்...மெல்ல நகர்ந்து போறதும்.... அதுலயும் சில பேரு கொடுமை தாங்காம செத்து விழுறதுமா....ரோடு ஷோ தானே அது?” என்று நிறுத்தினார். நான் குறுக்கே பேச முற்பட்டபோது, கையமர்த்தி விட்டுத் தொடர்ந்தார்.
“அந்தக் கொடூரத்திலிருந்து கொஞ்சம் மூச்சு விட்டுக்கக் கூட நேரம் கொடுக்காம, அடுத்த ஆண்டே ஜிஎஸ்டி வரியை எந்த சிந்தனையுமில்லாம அவசர அவசரமா திணிச்சாங்க ளே....பெருங்கொதிப்போடு சிறுதொழில் குறுந்தொழில் செய்றவங்க எத்தனை மாநிலங்கள்ல சாலையில் கதறிக்கிட்டு வந்து நின்னாங்க.... ரோடு ஷோ இல்லாம என்னது அது?” மேலும் தொடர்ந்தார் அவர்: “கொரோனா வந்தாலும் வந்தது.... முழு முடக்கம்னு அறிவிச்சாரு ஜி. எல்லாக் கதவையும் மூடுன்னாரு...கோயில்ல இருக்கற சாமிங்களும் கண்களை மூடிக்கிட்டுக் கதவையும் சாத்திக்கிச்சு...ஆனா....எங்கிருந்தோ புலம் பெயர்ந்து எங்கெல்லாமோ வேலை தேடி அலஞ்சு எங்கோ ஒரு மூலையில் பிழைப்பைத் தேடிக்கிட்டு கால் வயிறு அரை வயிறு கஞ்சி குடிச்சிகிட்டு கிடந்த ஜனங்க என்ன பாவம் பண்ணி னாங்க..... இனி எப்போ கதவு தொறக்கும்...எப்போ திரும்ப வும் வேலைக்கு அழைப்பாங்க...எப்போ மறுபடியும் கூலிப் பணம் கையில வந்து சேரும்னு அலைமோதி....பெட்டி படுக்கை மூட்டை முடிச்சு குழந்தை குட்டிங்க எல்லாம் சேத்து கட்டிக்கிட்டு தெற்கிருந்து வடக்க நோக்கியும், மேற்கிருந்து கிழக்கு நோக்கியும் சோறு தண்ணியில்லாம, நிக்க நிழ லில்லாம, பொட்டுத் தண்ணி குடிக்க வழியில்லாம, காய்ச்சல் வந்தா மருந்து வாங்கவும் காசில்லாம கடையில்லாம கதியில்லாமப் போனாங்களே ஒரு ஜென்ம யாத்திரை...” இங்கே கொஞ்சம் நிறுத்திக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்: “அவங்கவங்க ஊரைத் தேடி மனு சாளைத் தேடி...கிடைக்குற வண்டியில கும்பல் கும்பலாத் தொத்திக்கிட்டு ஏறி ...அதுக்கும் வழியில்லன்னு நாள் கணக்குல பாதசாரியா நடந்தாங்களே திக்கு திசை தெரியாம... செத்துச் செத்து விழுந்தாங்களே பாதி வழியில... பெத்த ஆத்தா செத்தது கூடத் தெரியாம அவ சேலையைச் சுத்திச் சுத்தி வெளயாடிட்டு கிடந்ததே குழந்தை... இதெல்லாம் ரோடு ஷோ இல்லன்னா எது தான் ரோடு ஷோ?”
அவர் குரல் இப்போது மிகவும் உரத்துக் கேட்க, உறைந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்தேன். “பதற்றத்தில் வந்து நின்னாங்க...பதறிப் போய் வந்து நின்னாங்க....பாவப்பட்டவங்க பரிதாபமா வந்து நின்னாங்க சாலையில.... இந்தப் பத்து வருஷத்துல எத்தனை எத்தனை ரோடு ஷோ....ஆனா கோபத்துல ஆவேசத்துல ரோஷத்துல யும் ஒரு ரோடு ஷோ நடந்தது....” இப்போது நண்பர் கொஞ்சம் நிமிர்ந்து கம்பீரமாக என்னைப் பார்த்தபடி தொடர்ந்தார்: “அந்த ரோடு ஷோ யாரு நடத்தினது ....விவசாயிங்க...அதுவும் எங்க? தலைநகர்ல! தேசத்தோட தலைவிதியைத் தீர்மானிக்கிற ஆளுங்க நாங்கடான்னு சொல்லி, கோட்டையே கலகலத்துப் போகிற மாதிரி நடத்துனாங்க...ஒரு நாள் இல்ல..ரெண்டு நாள் இல்ல.. ஒரு மாசம் இல்ல...ரெண்டு மாசம் இல்ல...370 நாளு! டிராக்டரைக் கொண்டாந்து நிறுத்தின ரோடு ஷோ! .சாலையிலேயே பொங்கி சாலையிலேயே தூங்கி சாலையிலேயே முழக்கம் போட்டுக் கம்பீரமாக நடத்தினாங்க, அது ரோடு ஷோ இல்லன்னா, எது பின்ன ரோடு ஷோ? எதுக்கும் அசராத ஆட்சியவே ஆட்டம் காண வச்சு ஆட்சியாளர் போட்ட சட்டங்களை அவங்களே வாபஸ் வாங்க வச்சாங்களே, அது தானே ரோடு ஷோ?” நண்பர் மேலும் பேசலானார்:
“உரிமை கேட்டு வீதிக்கு வர்ற தொழிலாளர் பட்டாளம், நியாயம் கேட்டு வீதிக்கு வந்து நிக்கிற மாற்றுத் திறனாளிகள், நீதி கேட்டு முழக்கம் எழுப்பும் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மை மக்கள்.... இவங்க நடத்தற போராட்டங்கள் தானே நாட்டோட நிலைமை விளக்கும் ரோடு ஷோ! கருத்து சுதந்திரம் பறிச்சுப் பொய் கேசு போட்டு இழுத்துட்டுப் போறாங்களே அறிஞர்கள், கவி ஞர்கள், செயல்பாட்டாளர்களை எல்லாம்...அதுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கிறாங்களே அது ரோடு ஷோ. மணிப்பூர்ல பரிவார மதவெறியனுங்க நடத்தின வாயில சொல்ல முடியாத வக்கிர அக்கிரமங்களைக் கண்டிச்சு நாடு முழுக்கக் கண்டனம் நடந்ததே..அது அல்லவா ரோடு ஷோ...” இங்கே கொஞ்சம் செருமிக்கொண்டு தொடர்ந்தார்: “ஆனா...இந்த ரோடு ஷோவை எல்லாம் தேர்தல் நேரத்துலயாவது ஊடகங்கள் காட்ட வேண்டாமா...அதன் மேல விவாதம் நடத்த வேண்டாமா? சோத்துக்கில்லாம பட்டினி கிடைக்கறவன விட்டுட்டு, விரதம் இருக்கறவன பேட்டி எடுத்துக் கொண்டாடற மாதிரி அல்லவா இங்க நடக்குது. பத்து வருஷம் நாட்டைக் குட்டிச் சுவரா ஆக்கி வச்சிருக்கற ஒருத்தரு இன்னும் துணிஞ்சு வந்து வாக்கு கேட்டு வந்து நிக்கிறது அவமானத்தின் ரோடு ஷோ. அந்தக் கட்சியை முறியடிச்சு ஆட்சியில இருந்து விரட்டியடிச்சு ஜூன் 4 அன்னிக்கு மக்கள் நடத்தணும் ஜனநாயக வெற்றியின் ரோடு ஷோ!” என்று பரவசத்தோடு முடித்தார். அப்படியே ஆரத் தழுவிக் கொண்டேன் நண்பரை!