மாநிலங்கள் எதன் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மொழி வழியில்தான் மாநிலங்கள் அமைய வேண்டும் என்ற கருத்தோட்டத்தை முன்னுக்குப் பின் முரணின்றி முன்வைத்தது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். அகண்ட பாரத ஆசையில் உழன்று கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் மொழி வழி மாநிலம் என்ற கண்ணோட்டத்தையே ஏற்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், மாநிலங்கள் என்பதேகூட ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எட்டிக்காயாய் கசந்தது. அதிகாரங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட மைய அரசு என்பதே அவர்களது விருப்பம். இந்தியாவை நூறு பகுதிகளாகப் பிரித்து அவை யாவும் தில்லியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றே ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்க்கர் கூறி வந்தார். மொழிவழி மாநிலங்கள் பிராந்தியவாதத்தை வளர்க்கும் என்றும், அபாயகரமான பிரிவினைக்கு வழி வகுத்துவிடும் என்றும் கோல்வால்க்கர் கும்மியடித் தார். மாவட்டங்களை இணைத்து ‘ஜனபாத’ அமைப்பு களை உருவாக்க வேண்டும் என்பதே கோல்வால்க் கரின் கருத்து. ஜனசங்கத்தின் பொதுச் செயலாளரான தீனதயாள் உபாத்யாயா, நூற்றுக்கும் மேற்பட்ட ஜனபாத அமைப்புகளை உருவாக்கி, மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மொழிவழி மாநிலங்களை முற்றாக அழிக்க வேண்டும் என்றார். காலாவதியான இந்த கருத்துக்கு ஆளுநர் ரவி இப்போது புகை போட்டு பூஜை நடத்துகிறார். தெலுங்கானா மாநிலம் உருவான நாள் ஜூன் 2 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நடை பெற்ற விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆட்சி செய்வதற்கு உதவும் என்பதால்தான் மாநிலங்கள் உரு வாக்கப்பட்டன. மலையாளிகள், தமிழர்கள், பீகாரிகள் என்று அழைக்கப்படுவது இந்தியா என்ற ஒற்றைச் சிந்தனைக்கு எதிராக உள்ளது” என்று உளறி யிருக்கிறார்.
மாநிலங்களுக்கான தனி அடையாளம் மக்களைப் பிரிக்கும் மனநிலையில் உருவாக்கப்படுகிறது. ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு இது எதிரானது. இந்தி யர்களாக ஒன்றுபடும் நோக்கத்தை இது வலுவிழக்கச் செய்கிறது என்றெல்லாம் பேசிச் சென்ற அவர், சிவன், ராமர், கிருஷ்ணா, பெண் கடவுள்கள் ஆகியவை ஒன்றாக உள்ளது. மொழி, உணவு என்று நாம் வேறு பட்டாலும், கலாச்சாரத்தால் ஒன்றுபடுகிறோம். மாநி லத்தில் கலாச்சாரம் என எதுவும் இல்லை. தமிழர்கள், தெலுங்கர்கள் போன்ற அரசியல் அடையாளங்களை மொழிவழி மாநிலங்கள் உருவாக்கியுள்ளன. இது போன்ற கற்பனை அடையாளங்கள் நாட்டின் வலிமை யைக் குறைக்கிறது என்று பேசியுள்ளார். இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன்பே நீண்ட போராட்டத்தின் பலனாக 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி ஒரிய மொழிப் பேசும் மக்களுக்காக தனி மாநிலம் பிறந்தது. காங்கிரஸ் தலைவரான பொட்டி ஸ்ரீராமுலு, ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகளை இணைத்து ஆந்திரப் பிரதேச மாநி லத்தை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். அன்றைய ஒன்றிய அரசு இதை ஏற்க மறுத்ததால், 1952 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி சென்னையில் உண்ணாநோன்பினைத் துவக்கி னார். தொடர் உண்ணாவிரதத்தால் 1952 டிசம்பர் 15 ஆம் தேதி மொழிவழி ஆந்திர மாநிலத்திற்காக உயிர்த் தியாகம் செய்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லா யிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலிசெலுத்தினர். இந்தப் பின்னணியில்தான் 1952 டிசம்பர் 19 ஆம் தேதி பிரதமர் நேரு, தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். 1953 அக்டோபர் 1 ஆம் தேதி சென்னை ராஜதானியி லிருந்து பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் உருவானது.
இப்போது பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்த் தியாகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி கொச்சைப் படுத்தி யிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு என்று அழைக்கக் கூடாது. தமிழகம் என்றுதான் அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி வம்பு வளர்க்க, பல திசைகளிலிருந்தும் வந்து குவிந்த அம்பு களால் நொந்து போன அவர், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என அசடு வழிந்தார். தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தின் பின்னணியில், விருது நகர் தியாகி சங்கரலிங்கனாரின் உயிர்த் தியாகம் உள்ளது. தமிழ்நாடு தீர்மானத்தை மாநிலங்களவை யில் கொண்டு வந்தவர் தமிழக பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் பி.இராமமூர்த்தி. தீர்மானம் விவாதத்திற்கு வந்த போது, அவர் சிறையிலிருந்ததால், வங்க கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் தோழர் பூபேஷ் குப்தா இதை முன்மொழிந்து பேசினார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, இதை ஆதரித்து உரையாற்றினார். பிறகு, 1967இல் அண்ணா முதல்வரான நிலையில், சென்னை ராஜ தானியின் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. அதேபோல, கேரள மாநில உருவாக்கத்தில் முன்னி ன்று முதன்மை பணியாற்றியவர்கள் தோழர்கள் இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்கள். மராட்டிய மொழி அடிப்படையிலான சம்யுக்த மகாராஷ்டிரம், மலையாள மொழி அடிப்படையிலான ஐக்கிய கேரளம், தெலுங்கு மொழி அடிப்படையிலான விசால ஆந்திரம், தமிழ் மொழி அடிப்படையிலான தமிழ்நாடு என்ற கோரிக்கைகளை உரத்த குரலில் முழங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். இது மொழிவழி உணர்வுகளை அங்கீகரித்து அதே நேரத்தில் இந்திய ஒருமைப்பாட்டின் வேருக்கு நீர்ப் பாய்ச்சுகிற உயரிய கோட்பாடாகும்.
பழைய மன்னராட்சி கால கனவில் இருந்த சனாதனி கள், மொழிவழி மாநிலங்களுக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், அதை கெடுக்க இயன்ற அனைத்தையும் செய்தவர்கள். இப்போதும் மொழிவழி மாநிலங்கள் என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது அல்ல. அந்த உயரிய கோட்பாட்டிற்கு உரம் சேர்ப்பது. கூட்டாட்சி க்கு வழிவகுப்பது. ஆனால், ஆளுநர் ரவி வாய்ப்பு கிடை க்கும் போதெல்லாம், மொழிவழி மாநிலங்கள் என்ற கோட்பாட்டிற்கு எதிராக விஷம் கக்கி வருகிறார். இந்தியா முழுவதும் கடவுள்கள் ஒன்றாகவே இருப்பதாக கயிறு திரிக்கிறார் ஆளுநர். ஆனால் இவர் பிறந்த பீகாரில்தான் சமண, புத்த மதங்கள் உரு வாகின. புத்த மதத்தின் ‘விஹார்’ என்பதிலிருந்துதான் பிஹார் என்றே சொல்லே உருவானது. அங்குதான் நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. ஆனால் இதை யெல்லாம் மறைத்துவிட்டு ஒரே நாடு, ஒரே மதம் என்ற ஆர்எஸ்எஸ் குரலை அப்படியே மிமிக்ரி செய்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுகிறவர்களும், ஆந்திராவில் தமிழ் மொழி பேசுகிறவர்களும் ஒன்றுபட்டே வாழ்கின்றனர். இவர்தான் குட்டையைக் குழப்பி ஒற்றுமையை சீர்குலைக்கிறார். தெலுங்கானா மாநிலம் உருவான நாளில் அந்த மாநிலத்தில் நடத்தப்பட்ட விழாவில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அழைக்கப்படவில்லை. அந்த அளவிற்கு மாநில அரசோடு முரண்பட்டு நிற்கிறார் அவர். இவரோ, தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒவ்வொரு நாளும் மாநில உரிமைகளுக்கு எதிராகவும் உணர்வுகளுக்கு எதிராகவும் பேசி கலகம் செய்ய நினைக்கிறார். அதன் ஒரு பகுதியே, ஊட்டியில் இவர் நடத்தும் துணைவேந்தர்களின் போட்டி மாநாடு. இவருடைய உள்ளம் முழுவதும் பொங்கி வழிவது ஆர்எஸ்எஸ் சிந்தனையே. இவர், அந்த அமைப்பில் சேர்ந்து அவர்களது கருத்தை பேசட்டும். இல்லையேல், ஆளுநர் வேலையை மட்டும் பார்க்கட்டும்.