புதுதில்லி,ஜன.18- மருத்துவப் படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இந்த நிலையில், திமுக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகும் அந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 28.12.2021 அன்று நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால் அவர்களை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமித்ஷா அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.பாலுவை தொடர்பு கொண்ட அதிகாரிகள், ஜனவரி 17 அன்று உங்களை சந்திக்க உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கித் தந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் தில்லியில் ஜனவரி 17 திங்களன்று மாலை 4.30 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), ரவிக்குமார் (விசிக), ஜி.கே மணி எம்எல்ஏ (பாமக) மற்றும் நவாஸ் கனி எம்.பி. (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். இது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுடன் கலந்து பேசி உடனடியாக முடிவெடுத்து, என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது குறித்து, தமிழக முதல் அமைச்சரிடம் தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்” என்று கூறினார். ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதியை அளிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.