புதுதில்லி, மார்ச் 24- 126 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக உச்சநீதிமன்றம் வியாழனன்று தெரிவித்தது. அணையின் பராமரிப்பு, கட்டமைப்புப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது முதன்மையானது. எனவே அணை மேற்பார்வைக் குழுவின் எல்லை மற்றும் பொறுப்புகளை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விரும்புவதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு, இந்தப் பிரச்சனையில் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களை குழுவில் சேர்க்க பரிந்துரைத்துள்ளது. அணையின் செயல்பாட்டு பணிகளை மேற்பார்வைக்குழு மேற்கொள்ளும். அணையின் கட்டமைப்பு பாதுகாப்புக்கு இந்தக்குழுவே முழுப் பொறுப்பாகும். இந்தக் குழு, தமிழகம் மற்றும் கேரளாவுக்குத் தேவையான பாதுகாப்புப் பணிகளை உரிய காலத்திற்குள் செய்யுமாறு அறிவுறுத்தும். குழுவின் வழிகாட்டு தல்களுக்கு இணங்க கேரளாவோ அல்லது தமிழ்நாடோ தாமதம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தலைமைச் செயலாளரே பொறுப்பாவார். நீதிமன்றத்தின் இந்த முன்மொழிவு தொடர்பாக தமிழகமும், கேரளமும் தங்களது கருத்துக்களை அளிக்க செவ்வாய்க்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைக்குதீர்வு காணவில்லையெனில் இது தொடர்ந்துகொண்டே இருக்கும் என நீதிபதி கன்வில்கர் கூறினார். தமிழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே மேற்பார்வைக் குழுவிற்கு அதிகாரம் வழங்குவது குறித்த நீதிமன்றத்தின் பரிந்துரை “மிகவும் நியாய மானது” என்றார். முல்லைப்பெரியாறு அணையை சுற்றியுள்ள பகுதி களில் வசிக்கும் மக்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிஜூ, மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் எந்த வொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் ஆதரிப்பதாக கூறினார்.