states

மோடி அரசை விமர்சிப்பதற்கும் வந்தது தடை!

புதுதில்லி, ஜூலை 14 - நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது.  இந்த மழைக்கால கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை, அக்னிபாதை திட்டம், மகாராஷ்டிர ஆட்சிக் கவிழ்ப்பு, நூபுர் சர்மா உள்ளிட்டோரின் மதவெறுப்புப் பேச்சு, தேசியச் சின்னம் அவமதிப்பு, வன்முறை விவகாரங்கள், ஜிஎஸ்டி வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கும் கூட ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட கொடுமை, பணவீக்கம், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு,  உள்ளிட்ட விவகாரங்களைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், வழக்கம்போல் அல்லாமல் இந்த முறை அனல் பறக்கும்; பிரதமர் நரேந்திர மோடியின் திறமையற்ற நிர்வாகம் மீது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனங்களை எழுப்புவார்கள்; அவர்களின் வார்த்தைகள் கடுமையாக இருக்கும் என்று ஊடங்கள் முன்கூட்டியே கூறியிருந்தன.  மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்க, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஜூலை 16-ஆம் தேதி மாலை 4 மணிக்கும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஜூலை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய கையேடு ஒன்றை மக்களவைச் செயலகம் அவசர அவசரமாக வெளியிட்டுள்ளது.  அதில், பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது அரசையும் விமர்சிக்க எதிர்க்கட்சிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் ஆங்கில, இந்தி சொற்களுக்குத் தடை விதித்துள்ளது.  அதாவது, ஊழல், துரோகம், அவமானம், வெட்கக்கேடு, இரட்டை வேடம், நாடகம், கபடநாடகம், துஷ்பிரயோகம், கண்துடைப்பு, கழுதை, முதலைக் கண்ணீர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி, ரத்தகளரி, அழிவு சக்தி (விநாஷ் புருஷ்), கோழை, கிரிமினல், ரவுடித்தனம், லாலிபாப், பாப்கட், ஒட்டுகேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர் (ஜூம்லாஜீவி), கொரோனா பரப்புபவர், சிறுபிள்ளைத் தனம் (பால் புத்தி)’, ஏமாற்றுக்காரர், கிரிமினல், மோசடிக்காரர், துரோகக்காரர் உள்ளிட்ட வார்த்தைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சரிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வார்த்தைகள் தவிர, ஏற்கெனவே தடைசெய்யப்பட்டுள்ள வார்த்தைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை மீறி தடை செய்யப்பட்ட வார்த்தைகளைக் குறிப்பிட்டால், நாடாளுமன்ற மரபுப்படி, அந்த வார்த்தைகள் நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய பாஜக அரசின் இந்த உத்தரவு எதிர்க்கட்சிகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒன்றிய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பயன்படுத்துகிற வார்த்தைகள் பெரும்பாலானவை தற்போதைய தடை மூலம் ‘அன்பார்லிமெண்ட்ரி வேர்டு’ ஆக்கப்பட்டுள்ளன.

வாய்ப்பூட்டு உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என ஒன்றிய அரசு  வெளியிட்டுள்ள பட்டியலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன. மோடி அரசின் இந்த நடவடிக்கையை அவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அரசாங்கத்தை விமர்சிக்கும் திறனைத் தடுக்கும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு செயல்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

பிரதமர் பேசாத பேச்சுக்களா?

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிட்ட வார்த்தைகளை பிரதமரே அவையில் பேசியுள்ளார் என காங்கிரஸ் நாடாளு மன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நாடாளுமன்ற விவாதங்களின் போது பிரதமர் பயன்படுத்திய வார்த்தைகளை நாங்களும் அவரிடம் கூறுவோம் என்றும் தெரிவித்துள்ளார். “அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகள் கூறும் அனைத்து வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாதவை என ஒன்றிய அரசு கூறிவிட்டது; அடுத்து அவர்கள் எதைத் தடை செய்யப் போகிறார்கள்?” என்று ஒன்றிய அரசின் முன்னாள்  அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி யுள்ளார்.

பேசத்தான் செய்வேன்; சஸ்பெண்ட் செய்து கொள்ளுங்கள்

“இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. ஆனால் எம்.பி-க்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளனர். சாதா ரணமாக உரை நிகழ்த்தும் போது பயன்படுத்தப் படும் திறமையற்றவர், வெட்கக்கேடு, ஊழல், துரோகம் உள்ளிட்ட அடிப்படை வார்த்தைகளை கூட பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் எனது உரையின் போது பயன் படுத்துவேன். இதற்காக என்னை இடைநீக்கம் செய்துகொள்ளுங்கள். ஆனால் ஜனநாயகத்திற் காக தொடர்ந்து போராடுவோம்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

சங்கி என்ற வார்த்தையை மட்டுமே தடை செய்யவில்லை

“பாஜக எவ்வாறு இந்தியாவை அழித்து வருகிறது என்பது குறித்து விளக்கும்போது, எதிர்க்கட்சிகள் வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பயன் படுத்தக் கூடாத வார்த்தைகளின் பட்டியலில் ‘சங்கி’  என்ற வார்த்தை மட்டும்தான் இல்லை” என்று அந்தக் கட்சியின் மற்றொரு எம்.பி.யான மஹூவா மொய்த்ரா விளாசியுள்ளார். “மக்களவையில் நான் எழுந்து நின்று, போலித்தனமான நடவடிக்கைகளுக்கு வெட்கப்பட வேண்டிய திறமையற்ற அரசாங்கத்தால் இந்தி யர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பேசக்கூடாது என்று சொல்கிறீர்களா?” எனவும் மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்ததாக காவி உடையில் வரவேண்டுமா?

சில வார்த்தைகளைக் குறிப்பிட்டு அவற்றை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக “நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களை காவி உடையில் வரச்சொல்வார்களா? என காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சந்தேகம் எழுப்பியுள்ளார்.  “நாடாளுமன்றத்தில் விதிகளை வகுக்கும் குழு ஒன்று உள்ளது. இப்படியே விதிகளை வகுத்து இரண்டாவது குடியரசை உருவாக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.