states

img

தேர்தல் முடிவுகள் : எதிர்க்கட்சிகள் தக்க பாடம் கற்க வேண்டும் - சிபிஎம்

குஜராத் தேர்தல் முடிவுகளிலிருந்து எதிர்க்கட்சிகள் தக்க படிப்பினையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், குஜராத்தில் அபரிமிதமான வெற்றியை பாஜக பெற்றிருக்கிறது. ஆயினும் மற்ற இரு மாநிலங்களிலும், அதாவது இமாசலப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலிலும், தில்லி மாநகராட்சித் தேர்தலிலும், தோல்வி அடைந்திருக்கிறது.

குஜராத்தில், பாஜக தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது, கடந்த முப்பதாண்டுகளாக அங்கே பாஜக மேற்கொண்டுவரும் ஆழமான மதவெறி நடவடிக்கைகளை உறுதிப்படுத்தியிருக்கிறது. நாட்டில் மிகவும் முக்கியமாக இருந்திடும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், மற்றும் மோசமான பொது சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளைவிட குஜராத்தி பெருமை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ‘இந்து அடையாளத்தை’ சித்தரிப்பது அங்கே வெற்றி பெற்று முன்னுக்கு வந்திருக்கிறது.

இமாசலப் பிரதேசத்தில்,. பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதிலும், அரசு எந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தபோதிலும் அவற்றையெல்லாம் மீறி கடுமையான தோல்வியை அளித்து, காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக ஆட்சியின் தவறான ஆட்சி மீதான மக்களின் அதிருப்தி அங்கே வெற்றிபெற்றிருக்கிறது.

தில்லியில், கடந்த 15 ஆண்டுகளாக கார்ப்பரேஷன் நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்த பாஜக-வைத் தோல்வியடையச் செய்து, ஆம் ஆத்மி கட்சி மாநகராட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. தில்லி வாழ் மக்கள் பாஜக மற்றும் ஒன்றிய அரசாங்கத்தின் அனைத்து வெற்று ஆரவார சூழ்ச்சிகளையும் புறந்தள்ளிவிட்டனர்.

இமாசலப்பிரதேசம் மற்றும் தில்லி தேர்தல் முடிவுகள், பாஜகவின் அதீதமான பணபலம் மற்றும் பல்வேறு தில்லுமுல்லுகளையும் உதறித்தள்ளிவிட்டு அதன் வடுப்படும்நிலையைத் தோலுரித்துக் காட்டி இருக்கின்றன.   மிகவும் தம்பட்டம் அடிக்கக்கூடிய மோடி காரணியும் வெத்துவேட்டு என்பதும் அங்கே முன்னுக்கு வந்திருக்கிறது.

 இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து எதிர்க்கட்சிகள் தக்க படிப்பினையைக் கற்றுக்கொள்ள வேண்டும், பாஜக-விற்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் இதர சக்திகள் அனைத்தையும் அணிதிரட்டி, ஒரு வலுவான ஒன்றுபட்ட எதிர்ப்பை முன்வைப்பதற்கான திட்டங்களைத் தீட்டிட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

(ந.நி.)