states

கொரோனா தரவுகள் திருட்டு: ஒன்றிய அரசு மறுப்பு

புதுதில்லி, ஜன.23- இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் மக்கள் முன்பதிவு செய்து கொள்ளவும், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை டவுன்லோட் செய்யவும் இந்த தளம் உதவுகிறது. அதற்கு பயனர்கள் மொபைல் எண், ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டியுள்ளது. இந்த தளத்தை ஒன்றிய அரசு நிர்வகித்து வருகிறது.  இந்த தரவு தளத்திலிருந்து கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளன. தரவுகள் ரெய்டு ஃபோரம்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது, ரெய்டு ஃபோரம்களில் உள்ள தரவு, பெயர், வயது, பாலினம், மொபைல் எண், முகவரி, தேதி மற்றும் கொரோனா அறிக்கையின் முடிவு ஆகியவற்றைக் காட்டுகிறது. பெயர் மற்றும் கொரோனா முடிவுகள் உட்பட தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் (PII) உள்ளடக்க விநியோக நெட்வொர்க் (CDN) மூலம் பகிரங்கப்படுத்தப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்சேகர் ராஜஹரியாவும் ட்வீட் செய்துள்ளார். ஆனால் தரவுகள் ஏதும் கசியவில்லை என ஒன்றிய அரசு மறுத்துள்ளது. கோவின் தளத்தில்  பதிவாகியுள்ள அனைத்து தகவல்களும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தரவுகள் எதுவும் கசியவில்லை எனவும் உறுதி செய்துள்ளது. கோவின் தளத்தில் பயனர்களின் முகவரி விவரங்கள் சேகரிக்கப் படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கசிவு தொடர்பான செய்தி குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.