states

தமிழ்நாட்டவர் ஆக்கப்பட்ட ஜான்சி ராணி 200 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தை ஆண்ட சோழர்கள்!

புதுதில்லி, செப். 20 - ஜான்சி ராணியை, ‘தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்’ என்று ஒன்றிய அரசின் செய்தியில் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி புரிந்தார்கள் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாக இடம்பெற்றுள்ள தகவல்களும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு,  பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அமைச்சர் ர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து ஒன்றிய அரசு தமிழில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “200 ஆண்டுகளுக்கு முன்பு  சோழ மன்னர்கள் ஆண்டபோது, கட்டடக்கலைப் படிப்பு இல்லை. எனினும், சிறந்த ஆளுமை, படைப்புத்திறன் காரண மாக அவர்கள் பல கட்டடங்கள் மற்றும் கோவில்களை உருவாக்கினார்கள்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல, “சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவை முன்னிட்டு, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மருது சகோதரர்கள், ராணி மங்கம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட  40 தமிழக சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் சுதந்திரப் போராட்டம் தொடர்பான ஒலி-ஒளிக் காட்சியை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்து பார்வையிட்டார்” எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோழர்கள் ஆட்சிக் காலம் என்பது கி.பி.13-ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது.  அவ்வாறிருக்க, “ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமது  பேச்சில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் ஆண்டதாக  கூறினார்” என ஒன்றிய அரசு செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பல்வேறு தரப்பினரையும் குழப்பமடையச் செய்துள்ளது. அதேபோல், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 40 சுதந்திரப் போராட்ட வீரர்கள் தொடர்பான கண்காட்சி படங்கள் சரியாகவே இடம்பெற்றுள்ளன. ஆனால், ஒன்றிய அரசின் செய்திக் குறிப்பில், ஜான்சி ராணி படமும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக வலிந்து குறிப்பிட்டு, அவரை தமிழ கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் என்று பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுவும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.