states

பொன்விழா ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு முதலமைச்சருக்கு சிஐடியு வேண்டுகோள்

சென்னை, ஜன. 17 - தமிழக முதலமைச்சருக்கு சிஐடியு தலைவர் அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே. ஆறுமுகநயினார் ஆகியோர் அனுப்பிய கடிதத்தின் விபரம் வருமாறு: தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தங்களது தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எங்களது பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்திற்கு முக்கியப் பங்குண்டு.  எனவே மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு 1967ஆம் ஆண்டு ‘போக்குவரத்து நாட்டுடமை கொள்கையை’ மேம்படுத்தியது. கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு பல தனியார் நிறுவனங்களை தேசியமயமாக்கி, 1972ஆம் ஆண்டு போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கியது. அதனடிப்படையில் 1.1.1972ஆம் ஆண்டு ‘பல்லவன் போக்குவரத்துக் கழகம்’ உருவாக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக 17.1.1972 ‘பாண்டியன் போக்குவரத்துக் கழகம்’, 1.3.1972 ‘சேரன், சோழன் போக்குவரத்துக் கழகங்கள்’ உருவாக்கப்பட்டன.

இந்த 4 போக்குவரத்துக் கழகங்கள் விரிவடைந்து தற்போது 8 போக்குவரத்துக் கழகங்கள் 26 மண்டலங்களாக செயல்பட்டு வருகின்றன.  தமிழக மக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதுடன், மாணவர், மகளிர் இலவச பயணம் போன்ற அரசின் பல நலத்திட்டங்களை போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுத்தி வருகின்றன.  இன்றைய தமிழகத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இன்று உலகம் எதிர்கொண்டுள்ள புவிவெப்பமயமாதலை குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விபத்தைக் குறைத்து உயிரிழப்புகளை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதே சிறந்த வழி என பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே பொதுப்போக்குவரத்தை மேம்படுத்த அரசுகள் கூடுதல் முன்னுரிமை அளித்து வருகின்றன.  தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் போக்குவரத்துக் கழகங்களை  மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் அரசு கூடுதல் நிதி ஒதுக்கி முன்னுரிமை வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சியில்  தொழிலாளர்களின் பங்களிப்பு முக்கிய பங்காற்றி வருகிறது.  எனவே தொழிலாளர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் பணியில் உள்ள, பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பொன்விழா நிறைவையொட்டி சிறப்பு  இன்கிரிமென்ட் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.  மின்சார வாரிய பொன்விழா  ஆண்டையொட்டி இதுபோன்ற ஊதிய உயர்வு வழங்கியுள்ளதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம். தமிழக மக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை அளிக்கவும்,  போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும் தங்களது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொழி லாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்குவோம் என்று தெரிவித்துள்ளனர். இதன் நகல்கள் தமிழக போக்குவரத்து அமைச்சர், முதன்மை செயலாளர் -

போக்குவரத்து துறை, அனைத்துக்கழக மேலாண் இயக்குனர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.