states

“ஜனநாயகத்தில் எந்த அமைப்பும் முழுமையானது அல்ல; ‘கொலீஜியமும்’ அதற்கு விதிவிலக்கல்ல..!”

புதுதில்லி, நவ. 26 - “கொலீஜியம் முறை திருப்திகரமாக இல்லை என நாட்டு மக்கள் கருதுகின்றனர்; அரசி யலமைப்புச் சட்டக் கூறுகளின்படி, நீதிபதிகளை நியமிப்பது அரசின் பணியே ஆகும். உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமித்து வருகிறது” என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடர்ந்து பேசி வருகிறார். அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ அமைப்பு பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்திற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம், அண்மைக் காலமாக விரைந்து ஒப்புதலும் வழங்குவ தில்லை. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கும் - ஒன்றிய அரசுக்கும் பனிப்போர் ஒன்று நடந்து வருகிறது. அண்மையில் இவ்விவகாரத்தில் கருத்து கூறிய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை  நீதிபதி டி.எஸ். தாக்கூர், “கொலீஜியம் சரியான நடைமுறை அல்ல என்று தினமும் யாராவது  (ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர்) கூறுவதை செய்திகளில் படிக்கி றோம். கொலீஜியம் முறை மிகச்சரியானது என்று யாரும் கூற முடியாது; அதேசமயம், மாற்றுத் தீர்வைக் குறிப்பிடாமல், கொலீஜியம் முறையை வெறுமனே விமர்சிப்பது எந்தப் பலனையும் தராது. கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதோ அல்லது நாட்டின் அடிப்படை உரிமைகள் அல்லது மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதோ - இவை இறுதியில் ஒரு சுதந்திர மான நீதித்துறையால் மட்டுமே கவனிக்கப்படக் கூடிய அம்சங்களாக உள்ளன” என்று பதிலளித்து இருந்தார்.

இந்நிலையில், தில்லியில், உச்ச நீதிமன்ற  பார் அசோசியேஷன் சார்பில் வெள்ளிக்கிழமை யன்று ‘அரசியலமைப்பு நாள் விழா’ நடை பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய தற்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி  டி.ஒய். சந்திரசூட் “ஜனநாயகத்தில் எந்த ஒரு  அமைப்பும் முழுமையானது அல்ல; அதற்கு கொலீஜியமும் விதிவிலக்கல்ல!” என்று பகிரங்கமாக பதிலடி கொடுத்துள்ளார். இவ்விழாவில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கலந்துகொண்டு பேசியிருந்தார். அவர், “நீதித்துறைக்கும் நிர்வா கத்திற்கும் இடையேயான மோதல் என்பது அர்த்தமற்றது. ஏனெனில் இரண்டுமே ஒரே அரசியல் சாசனத்தின் உருவாக்கங்கள். இந்திய நீதித்துறையின் சுதந்திரம் எவராலும் சீர்குலைக்க முடியாதபடி இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை” என்று சமாளித்திருந்தார். எனினும், ஒன்றிய சட்டத்துறை அமைச்ச ருக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.  சந்திரசூட் பதிலளிப்பதிலிருந்து விலகவில்லை. அதில் அவர் கூறியதாவது: “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் முழுமையானது அல்ல. அதற்கு ‘கொலீஜியம்’ முறை மட்டும் விதிவிலக்கா என்ன? நான் உள்பட கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நீதிபதிகளும் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட விசுவாசமான வீரர்களைப் போன்று செயலாற்றுகிறோம். ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளதாக கூறப்படும்போது, நாம் அந்த அமைப்புக்கு உட்பட்டே அதற்கும் தீர்வுகாண வேண்டியுள்ளது.

கொலீஜியம் நடைமுறை விவகாரத்தில் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் ஒருவர் மீது  ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்கக் கூடாது. இரு தரப்புக்கும் இடையே சமநிலை தேவை. கொலீஜியம் மூலமாக ஒன்றிய அர சுக்கு பரிந்துரைகளை அனுப்புவதற்கு முன், பல்வேறு கட்டங்களாக பரிசீலனைகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே அரசியலமைப்பு சார்ந்த அரசாட்சி நடைமுறை தொடரவேண்டும். கொலீஜியம் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதால் மட்டுமோ அல்லது நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்துவதால் மட்டுமோ நீதித்துறைக்கு நல்லவர்களைக் கொண்டுவந்து விட முடியாது. நீங்கள் எவ்வள வுதான் உயர்ந்த சம்பளத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தாலும், பிரபல மூத்த வழக்கறிஞர் களின் ஒருநாள் சம்பாத்தியத்தில் அது ஒரு  சிறு பகுதியாகத்தான் இருக்கும். அதையும் மீறி, ஒருவர் நீதிபதியாக ஆவது என்பது மனசாட்சி யின் அழைப்பாகும். மக்கள் சேவையில் அவ ருக்கு உள்ள அர்ப்பணிப்பைப் பொறுத்த தாகும்.  சிறந்த சமூகத்தை உருவாக்கும் சக்தி நீதிபதிகளிடம்தான் உள்ளது என்று இளம் வழக்கறிஞர்கள் மனதில் பதிய வைப்பதுதான் முக்கியமானதாகும். அப்போதுதான் நல்ல மனிதர்கள் நீதிபதிகளாக வருவார்கள். நாம் இளைஞர்களுக்கு எப்படி முன்மாதிரியாக திகழ்ந்து அவர்களின் நீதிபதி கனவிற்கு வித்திடு கிறோம் என்பதில்தான் கொலீஜியம் சர்ச்சைக் கான விடைகளும் இருக்கின்றன. இளம் வழக் கறிஞர்கள் நீதிபதிகளாவதற்கு வழிகாட்டினால் தான் நீதித்துறையில் சிறந்த மனிதர்கள் இருப்பார்கள். நீதித்துறை அலுவலகங்களை இளம் வழக்கறிஞர்கள் அணுகுவது எளிதாக்கப் பட வேண்டும். 

நீதிபதிகளின் ஓய்வுக் காலத்திற்குப் பின்ன ரும் கூட அவர்களிடமிருந்து பிரித்து எடுக்க முடி யாத ஒன்று மனநிறைவுதான். 2020 மே மாதம், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தேன். அப்போது எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதில், இந்திய கடற்படை யின் பெண் கமாண்டர்கள், ‘நீங்கள் எங்களை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் நீங்கள் எங்களுக்காக செய்த நியாயத்திற்காக உங்கள் நலன் வேண்டி பிரார்த்திக்கிறோம்’ என்று  குறிப்பிட்டிருந்தனர். அதுதான் ஒரு நீதிபதிக்குக் கிடைக்கக் கூட பெரிய நிம்மதி. இரக்கத்துடன் மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொண்டு நியாயத்தின் பக்கத்தை அறிந்து  தீர்ப்பு வழங்குவதுதான் சிறந்த நீதியாகும். ஏன் ஒருவர் குற்றவாளியாக மாறினார் என்பதை  புரிந்து கொள்வதுதான் சிறந்த தீர்ப்பாகும். நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக் கை என்பது, நீதிமன்ற செயல்பாடுகளை நீதிபதி கள் எப்படி நடத்திச் செல்கிறார்கள் என்பதி லிருந்து ஏற்படுவதாகும். முக்கியமான தீர்ப்பு களை வெளியிடுவது மட்டும் நீதிமன்றங்களின் பணியல்ல. சாதாரண மக்களின் வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது  முக்கியமானதாகும். ஏழைகளின் வழக்குகளில் வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த நிர்வாகிகள் ஆஜராகி வாதிடுவதற்கான அமைப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியுள்ளார். எனினும், இந்த நிகழ்ச்சிக்குப் பின் தனியார்  தொலைக்காட்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு,  எப்போதும்போல கொலீஜியம் முறைக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். “அரசிய லமைப்பின் எந்தச் சட்டத்தின் எந்தப் பிரிவின்  கீழ் கொலீஜியம் முறை உள்ளது? நீதிபதிகள் ஒன்றுகூடி முடிவு செய்கிறார்கள் என்பதற்காக மட்டும் அதை நாடு எப்படி ஏற்றுக்கொள்ளும்? 1991 முன் வரையில் அனைத்து நீதிபதிகளை யும் அரசுதான் நியமனம் செய்து வந்தது” என்று வழக்கமான கேள்விகளை எழுப்பினார்.